உப்புநீரில் வாய் கொப்பளித்து கொரோனா பரிசோதனை.. 3மணி நேரத்தில் முடிவுகள்..அசத்தும் இந்திய ஆய்வாளர்கள்
டெல்லி: உப்பத் தண்ணீரில் வாய் கொப்பளிப்பதன் மூலம் 3 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பைக் கண்டறிய உதவும் புதிய முறை RT PCR பரிசோதனை முறையை சிஎஸ்ஐஆர் மற்றும் நீரி ஆராய்ச்சியாளர்கள் இணைந்து கண்டுபிடித்துள்ளனர்.
கொரோனா பரவலைக் கட்டுக்குள் வைக்க 2 விஷயங்கள் மிகவும் முக்கியமானவை என்பது வல்லுநர்களின் கருத்து. ஒன்று கொரோனா பரிசோதனைகள், மற்றொன்று கொரோனா தடுப்பூசிகள் ஆகும்.
தேசிய நீர் மேம்பாட்டு நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்புகள்.. மொத்தம் 62 இடங்கள் காலி!
அதிலும் குறிப்பாக கொரோனா பரிசோதனைகள் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டால் மட்டுமே, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை எளிதாகக் கண்டறிந்து அவர்களைத் தனிமைப்படுத்த முடியும். இதன் மூலம் வைரஸ் பரவலை நிறுத்தலாம்.
கொரோனா பரிசோதனை
உலகளவில் தற்போது வரை கொரோனாவை கண்டறியப் பல முறைகள் உள்ளன. ரேப்பிட் ஆண்டிஜன் முறையில் வெறும் சில நிமிடங்களில் வைரஸ் பாதிப்பைக் கண்டறியலாம். ஆனால், இவை துல்லியமான முடிவுகளைத் தராது. அதேநேரம் வழக்கமாக மேற்கொள்ளப்படும் RT PCR சோதனைகள் துல்லியமாக இருக்கும் என்றாலும், முடிவுகள் வர அதிகபட்சமாக ஓரிரு நாட்கள் வரை ஆகும். இந்த நேரத்தில் கொரோனா நோயாளிகள் தங்களை அறியாமலேயே மற்றவர்களுக்கு கொரோனாவை பரப்பிவிடுகின்றனர்.
வாய் கொப்பளித்தால் போதும்
இந்நிலையில், நாக்பூரில் அமைந்துள்ள சிஎஸ்ஐஆர் எனப்படும் அறிவியல் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி மையம் (NEERI) ஆராய்ச்சியாளர்கள் இணைந்து புதிய முறையிலான RT PCR பரிசோதனை முறையை உருவாக்கியுள்ளனர். இதில் ஒருவர் சலைன் எனப்படும் உப்பு நீரை வாயில் ஊற்றி 20 விநாடிகள் வரை கொப்பளிக்க வேண்டும். பிறகு அதில் மேற்கொள்ளப்படும் RT PCR பரிசோதனையில் வெறும் 3 மணி நேரத்தில் துல்லியமான முடிவுகள் கிடைப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
எளிமையான முறை
இது குறித்து சுற்றுச்சூழல் வைராலஜி பிரிவின் மூத்த ஆராய்ச்சியாளர் டாக்டர் கிருஷ்ணா கையர்னர் கூறுகையில், "இது மிகவும் எளிமையான ஒரு முறையாகும். இதற்காக உப்புத் தண்ணீரைப் போல இருக்கும் பிரத்தியேக திரவம் ஒன்றை நாங்கள் உருவாக்கியுள்ளோம்" என்றார். இந்த பரிசோதனைகள் 100 சதவிகிதம் வரை துல்லியமாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த பரிசோதனை முறைக்கு தற்போது இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
பழைய முறை vs புதிய முறை
தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வழக்கமான RT PCR சோதனைகளில் ஒருவரது சளி மாதிரியைச் சேகரிக்க வேண்டும். இதற்கு அதிக நேரம் தேவைப்படும். மேலும், மூக்கு மற்றும் தொண்டையிலிருந்து சளி மாதிரிகளைச் சேகரிப்பதால், மக்கள் இதை அசவுகரியமாக உணர்கின்றனர். இந்த சிக்கல்களை புதிய முறை சீர் செய்கிறது. புதிய முறை எளிமையாக உள்ளதால் அதிகளவில் பரிசோதனைகளை மேற்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கிரமங்கள்
மேலும், இந்தப் புதிய முறையைப் பயன்படுத்தி கிராமங்கள் மற்றும் பழங்குடியின பகுதிகளில் அதிகளவில் பரிசோதனை மேற்கொள்ள முடியும் என ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். புதிய முறையைப் பயன்படுத்தி கொரோனா பரிசோதனையை மேற்கொள்ள நாட்டிலுள்ள ஆய்வகங்களுக்குப் பயிற்சி அளிக்கப்படும் என்றும் NEERI மையம் தெரிவித்துள்ளது.