தவறான பதில் அளித்த போதிலும் நீட் தேர்வில் 44 பேர் முழு மார்க்.. இது எப்படி சாத்தியம்.. பரபர பின்னணி
டெல்லி: நீட் தேர்வில் 1563 மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மார்க்குகளை நீட் முகமை திரும்பப் பெற்றுள்ளன. இந்த கருணை மார்க் எதற்காக வழங்கப்பட்டது.. இதை ஏன் இப்போது திரும்பப் பெற்றனர் என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
இந்தாண்டு நீட் தேர்வு முடிவுகள் வெளியானது முதலே அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் இந்தாண்டு மொத்தம் 67 பேர் 720க்கு 720 என்று முழு மார்க் பெற்றுள்ளனர்.

கடந்தாண்டு வெறும் 2 பேர் மட்டுமே 720க்கு 720 மார்க் பெற்ற நிலையில், இந்தாண்டு 67 மாணவர்கள் பெற்றுள்ளதே சர்ச்சைக்குக் காரணமாகும். இது தொடர்பாகப் பலரும் நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
நீட் தேர்வு: இது ஒரு பக்கம் இருக்க நீட் தேர்வு முடிவுகளில் வேறு சில சர்ச்சைகளும் கிளம்பின. குறிப்பாக இயற்பியல் பிரிவில் கேட்கப்பட்ட ஒரு கேள்வி சர்ச்சையைக் கிளப்பி இருந்தது. இந்த குறிப்பிட்ட கேள்விக்கு மொத்தம் இரண்டு சரியான பதில்கள் இருந்துள்ளன. டாப் மார்க் பெற்ற 67 பேரில் 44 பேர் இந்த கேள்விக்குக் கருணை மார்க் பெற்றதே விவாதத்தைக் கிளப்பி இருக்கிறது. அணுசக்தி கலவை தொடர்பான கேள்விக்கு இரண்டு சரியான பதில்கள் இருக்கிறதாம்.
கேள்வி: ஸ்டேட்மெண்ட் 1- அணுக்கள் நடுநிலையானவை (electrically neutral).. ஏனென்றால் அதில் பாசிட்டிவ் மற்றும் நெகடிவ் சார்ஜ்கள் சம எண்ணிக்கையில் உள்ளன.
ஸ்டேட்மெண்ட் 2- தனிமத்தின் ஒவ்வொரு அணுக்களும் நிலையானவை.. அவை சிறப்பியல்பு நிறமாலையை (characteristic spectrum) வெளியிடுகின்றன.
இந்த ஸ்டேட்மெண்ட்களை வைத்து கீழே இருக்கும் சரியான பதிலைத் தேர்வு செய்யுங்கள்
(A) முதலாவது ஸ்டேட்மெண்ட் சரியானது ஆனால் இரண்டாவது தவறானது;
(B) முதலாவது ஸ்டேட்மெண்ட் தவறானது ஆனால் இரண்டாவது சரியானது;
(C) முதல் மற்றும் இரண்டாவது ஸ்டேட்மெண்ட் என இரண்டும் சரியானவை;
(D) இரண்டு ஸ்டேட்மெண்ட்களும் தவறானவை.
கருணை மார்க்: இந்த கேள்விக்குத் தான் கருணை அடிப்படையில் மார்க் கொடுத்துள்ளார்கள்.. ஏனென்றால் நீட் முகமை வெளியிட்ட பதில்களில் சரியான விடை A எனக் கூறப்பட்டு இருந்தது.. இருப்பினும், பல மாணவர்கள் நீட் முகமையின் பழைய பதிப்பில் கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் ஆப்ஷன் சி அதாவது இரண்டு ஸ்டேட்மெண்டும் சரி என்பதே கரெக்ட் ஆன பதில் என முறையிட்டனர்.
இதையடுத்து சி ஆப்ஷனை பதிலாகத் தேர்வு செய்தவர்களுக்கும் கருணை மார்க் வழங்க நீட் முகமை முடிவு செய்தது. இதன் காரணமாகவே 720க்கு 715 மார்க் பெற்றிருக்க வேண்டிய 44 மாணவர்களும் 720 முழு மார்க் பெற்றனர்.
ஒட்டுமொத்தமாக இதுபோல 1563 மாணவர்களுக்குக் கருணை மார்க் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், இவர்களுக்கு வழங்கப்பட்ட கருணை மார்க்குகளை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு இப்போது சுப்ரீம் கோர்ட்டில் அறிவித்துள்ளது.
நீட் தேர்வில் மிகப் பெரிய முறைகேடுகள் நடந்துள்ளதாக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், கருணை மார்க்குகளை திரும்பப் பெறும் முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. இதனால் இப்போது கருணை மார்க் பெற்றிருந்த அந்த 1563 மாணவர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மறுதேர்வு: கருணை மார்க்குகள் கழிக்கப்பட்டு அந்த 1563 மாணவர்களின் அசல் மார்க்குகள் வெளியிடப்படும். அதன் அடிப்படையிலேயே கலந்தாய்வும் நடத்தப்படுமாம். அதேநேரம் இந்த 1563 மாணவர்களுக்கு ஜூன் 23ஆம் தேதி மறுதேர்வு நடத்தவும் தயாராக இருப்பதாக நீட் முகமை அறிவித்துள்ளது. புதிய மார்க் அடிப்படையில் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாமா அல்லது மறுதேர்வு எழுதலாமா என்பதை மாணவர்களே முடிவு செய்யலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications