2007ல் நடந்ததை மறக்காதீங்க.. அமித் ஷாவிடம் சொன்ன டி.ஆர் பாலு.. பரபர மீட்டிங்கில் பேசியது என்ன?
டெல்லி: ஏகப்பட்ட ஒத்திவைப்பு.. காத்திருப்புகள்.. பேட்டிகளுக்கு பின்பாக ஒருவழியாக திமுக எம்பி டி ஆர் பாலு தலைமையிலான தமிழ்நாடு எம்பிக்கள் குழு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து உள்ளனர்.
தமிழ்நாட்டில் எப்படியாவது நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று திமுக தலைமையிலான அரசு முயன்று கொண்டு இருக்கிறது. இதற்காக தமிழ்நாடு அரசு கடந்த குளிர்கால கூட்டத்தொடரில் தீர்மான மசோதா கொண்டு வந்தது.
பிக் பாஸ் தமிழ் 5: முதல்முறையாக பினாலே மேடையில் நடந்த அதிசயம்.. வாழ்த்தும் ரசிகர்கள்
ஆனால் அரசு தீர்மான மசோதா கொண்டு வந்தும் அதை மாநில ஆளுநர் ஆர். என் ரவி இன்னும் ஏற்காமல் இருக்கிறார். இந்த மசோதாவிற்கு அவர் இன்னும் ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்.
சந்திப்பு
இதையடுத்து கடந்த டிசம்பர் கடைசி வாரம் தமிழ்நாடு எம்பிக்கள் குழு டெல்லி சென்றது. திமுக குழு தலைவர் எம்பி டி.ஆர். பாலு, அதிமுக எம்பி நவநீதகிருஷ்ணன், விசிக தொல். திருமாவளவன், சிபிஎம் எம்பி சு. வெங்கடேசன் உட்பட தமிழ்நாடு எம்பிக்கள் குழுவாக சென்றுள்ளனர். அன்று உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க ஏற்கனவே டிஆர் பாலு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி இருந்தார். ஆனால் அன்று அமித் ஷாவை அனைத்து கட்சி எம்பிக்களால் சந்திக்க முடியவில்லை.
தொடர் முயற்சி
பின்னர் மறுநாளே மீண்டும் அமித் ஷாவை சந்திக்க எம்பிக்கள் குழு முயன்றது. ஆனால் அமித் ஷா அதற்கு நேரம் கொடுக்கவில்லை. இரவு முழுக்க காத்திருந்தும் அமித் ஷாவை சந்திக்க நேரம் வழங்கப்படவில்லை. 4 முறை முயன்றும் கூட அமித் ஷாவை சந்திக்க முடியவில்லை. ஒரு வாரம் இதற்காக தமிழ்நாடு எம்பிக்கள் குழு அங்கேயே தங்கி இருந்தனர். இது தமிழ்நாடு எம்பிக்களுக்கு மிகப்பெரிய இகழ்ச்சியாக பார்க்கப்பட்டது.
அமித் ஷா பிசி
முதலில் அமித் ஷா பிசியாக இருக்கலாம்.. விரைவில் எங்களை பார்ப்பார் என்று நம்புகிறோம் என்று நம்பிக்கையுடன் பேசிய டி ஆர் பாலு அதன்பின் கொஞ்சம் கோபமாக பேட்டி அளித்தார். முக்கியமாக தமிழ்நாடு ஆளுநர் மீது விமர்சனங்களை வைத்த டி.ஆர்.பாலு, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை சட்டமாக்காமல் காலம் தாழ்த்தி வருகிறார்கள். ஆளுநர்தான் அதை மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும். ஆனால் ஆளுநர் இன்னும் அனுப்பவில்லை. நீட் விலக்கு மசோதா சட்டம் ஆகாமல் இருக்க ஒரே காரணம் ஆளுநர் ஆர்என் ரவி. அவர் செய்த தவறு இது. தனது தவறுக்கு பொறுப்பேற்று அவர் உடனே பதவி விலக வேண்டும், என்று குறிப்பிட்டார்.
தீர்மானம்
அதன்படி தமிழ்நாடு அரசும் அனைத்து கட்சி கூட்டத்தை நடத்தியது. ஜனவரி 8ம் தேதி முதல்வர் ஸ்டாலின் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார். இதில் சட்ட போராட்டம் நடத்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. நீட் தேர்வுக்கு எதிரான சட்ட போராட்டம் தொடரும் என்று அனைத்து கட்சிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில்தான் தமிழ்நாடு அரசின் தொடர் அழுத்தத்திற்கு பின் ஒருவழியாக தமிழ்நாடு எம்பிக்களை உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று சந்தித்தார்.
மனு
அதன்படி நீட் நுழைவுத் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக அனைத்து கட்சி எம்.பி.க்கள் குழு சந்தித்து மனு அளித்தது. இந்த சந்திப்பில் டிஆர் பாலு பேசியது குறித்த சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அதன்படி, தமிழ்நாட்டில் மருத்துவ கட்டமைப்பு முறையாக இருக்கிறது. எல்லோருக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும். நீட் தேர்வால் சம வாய்ப்பு பறிக்கப்படுகிறது. மத்திய அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று கூறி இருக்கிறார்.
அமித் ஷா கேள்வி
இதற்கு அமித் ஷா தரப்பு, தமிழ்நாட்டிற்கு மட்டும் தேசிய அளவிலான தேர்வில் எப்படி விலக்கு தருவது என்று கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு டி ஆர் பாலு 2007ல் நடந்த விஷயத்தை தாங்கள் மறக்க கூடாது. 2007ல் தொழிற்கல்விகளுக்கான நுழைவு தேர்வில் இருந்து அரசு தீர்மானம் மூலம் விலக்கு பெற்றோம். அப்போது ஆளுநர் எங்கள் தீர்மானத்தை ஏற்று பின்னர் குடியரசுத் தலைவர் அதற்கு ஒப்புதல் அளித்தார். அதேபோல் இப்போதும் செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டதாக தெரிகிறது.
அமித் ஷா டி ஆர் பாலு பதில்
இதற்கு அமித் ஷா அளித்த பதிலில், இது தொடர்பாக மத்திய சுகாதார துறை அமைச்சர் மாண்டவியாவிடம் பேச வேண்டும். அதேபோல் கல்வித்துறை அமைச்சரிடம் பேச வேண்டும். அவர்களிடம் பேசிவிட்டு, அவர்கள் சொல்வதை வைத்து உங்களுக்கு பதில் அளிக்கிறேன், என்று குறிப்பிட்டதாக தெரிகிறது. ஆனால் இதில் ஆளுநர் தமிழ்நாடு அரசின் தீர்மான மசோதாவை ஏற்றுக்கொள்வது பற்றி அமித் ஷா எதுவும் பேசியதாக தகவல் வெளியாகவில்லை.