ஜூன் 21 இல் நீட் மறுத்தேர்வு! யாரோ செய்த தவறுக்கு கண்ணீர் விடும் மருத்துவக் கனவு மாணவர்கள்
டெல்லி: நாடு முழுவதும் ஜூன் 21 ஆம் தேதி நீட் மறுத்தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் தேர்வு ரத்து மாணவர்களுக்கு மன உளைச்சலை கொடுத்துள்ளதால் பிளஸ் 2 தேர்வு அடிப்படையில் மருத்துவ படிப்புக்கு மாணவர்களை தேர்வு செய்யும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்க வேண்டும் என பலர் கோரிக்கைகள் விடுக்கப்பட்டிருந்த நிலையில் மறுத்தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கை நீட் எனும் நுழைவு தேர்வு மூலம் நடைபெறுகிறது. தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் இந்த தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. ஆனாலும் ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வு நடத்துவதும், நீட் தேர்வு என்ற பெயரில் மாணவர்கள், மாணவிகளை சோதனை என்ற பெயரில் மனஉளைச்சலுக்குள்ளாக்குவதும் நடந்து வருகிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டும் மே 3 ஆம் தேதி நீட் தேர்வு நாடு முழுவதும் நடத்தப்பட்டது. இந்த தேர்வை நாடு முழுவதும் 23 லட்சம் மாணவர்கள் எழுதியிருந்தனர். இந்த தேர்வு முடிவுகளுக்காக காத்திருந்த மாணவர்களுக்கு அதிர்ச்சி தகவல் கிடைத்தது.
அதாவது ராஜஸ்தானில் நீட் தேர்வு வினாத்தாள் லீக்கானதாக எழுந்த புகாரின் பேரில் மே 3 ஆம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வு ரத்து செய்யப்படுவதாக தேசிய தேர்வு முகமை அறிவித்தது.
இந்த தேர்வுக்கு பதிலாக மறுத்தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் மாணவர்கள் அந்த மறுத்தேர்வுக்காக மீண்டும் பணம் செலுத்த தேவையில்லை என்றும் அறிவித்திருந்தது.
நீட் தேர்வு வினாத்தாள் கசிந்த சம்பவம் இதுவரை 86 முறை நடந்துள்ளதாகவும் 40 -க்கும் மேற்பட்ட முறை மறுத்தேர்வு நடத்தப்பட்டதாகவும் காங்கிரஸ் விமர்சித்திருந்தது. அது போல் ஆண்டுதோறும் வினாத்தாள் லீக்காவது நடந்த வண்ணம் இருப்பது நேர்மையாக தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் மத்தியில் மன உளைச்சலை ஏற்படுத்துகிறது. எனவே இந்த நீட் தேர்வு முறையை ரத்து செய்து, பிளஸ் 2 மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என முதல்வர் விஜய் கோரிக்கை விடுத்திருந்தார்.
அது போல் நீட் மறுத்தேர்வு நடத்த கூடாது என முன்னாள் முதல்வர் ஸ்டாலின், பிரதமருக்கு இன்று காலை கடிதம் எழுதியிருந்தார். இந்த நிலையில் நீட் மறுத்தேர்வு ஜூன் 21 ஆம் தேதி நடத்தப்படும் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. இந்த தேர்வுக்கு ஹால்டிக்கெட் வழங்கும் பணிகள் விரைவில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்காக கடந்த சில ஆண்டுகளாக படித்து வந்தவர்கள், தற்போதைய பிளஸ் 2 மாணவர்கள் இந்த மறுத்தேர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
மருத்துவ சீட்டில் முறைகேட்டை தடுக்க நீட் தேர்வு நடத்துவதாக சொல்லப்படும் நிலையில் அந்த தேர்வில் நடக்கும் முறைகேட்டையே என்டிஏவால் தடுக்க முடியாத நிலை இருந்து வருகிறது. இந்த தேர்வில் நன்றாக எழுதிவிட்டோம், மருத்துவ படிப்பு படிக்க இடம் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில் இருக்கும் மாணவர்களுக்கு இந்த மறுத்தேர்வு பேரிடி என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.












Click it and Unblock the Notifications