நீட் ஆள்மாறாட்டம்.. 10 மாணவ மாணவியரின் புகைப்பட விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை.. கைவிரித்த ஆதார்
டெல்லி: கடந்த பிப்ரவரி மாதம், நீட் தேர்வில் மோசடி செய்து தேர்வு எழுதிய மாணவ மாணவிகளின் 10 புகைப்படத்தை சிபிசிஐடி போலீசார் வெளியிட்டனர். இந்நிலையில் அந்த 10 பேரின் புகைப்பட விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த ஆண்டு நீட் தேர்வில் முறைகேடு செய்து பல்வேறு மருத்துவகல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்தனர்
தேனி மருத்துவ கல்லூரியில் படித்து வந்த சென்னை மாணவர் உதித் சூர்யா, தனது தந்தையும் டாக்டருமான வெங்கடேசன் மூலமாக இந்த முறைகேடு விவகாரம் அம்பலமானது.
இது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கில் சிக்கிய உதித் சூர்யா, வெங்கடேசன் இருவரிடமும் நடத்தப்பட்ட விசாரணையில் பல தகவல்கள் வெளியானது./ மேலும் பல மாணவர்கள் நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் மூலமாக டாக்டர் படிப்பில் சேர்ந்து இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது.

10 பேர் யார் யார்?
இதனைத் தொடர்ந்து சென்னை மாணவர்களான பிரவீன், அவரது தந்தை சரவணன், ராகுல், அவரது தந்தை டேவிஸ், இர்பான், முகமது சபி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
நீட் ஆள் மாறாட்ட விவகாரத்தில் தேர்வு எழுதாமல் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்த மாணவர்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவர்களுக்காக தேர்வு எழுதிய மாணவர்கள் யார்-யார்? என்பது தெரியவில்லை.

நுழைவு சீட்டு
நீட் தேர்வு நுழைவு சீட்டில் ஒட்டப்பட்டிருந்த போட்டோக்களை கைப்பற்றிய போலீசார் அந்த போட்டோக்களை வெளியிடாமலேயே அவர்களை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார்கள் ஆனால் மோசடியாக தேர்வு எழுதியவர்களை நெருங்க முடியவில்லை.

புகைப்படம் வெளியீடு
இதையடுத்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் கடந்த பிப்ரவரி மாதம் 11-ம் தேதி மாலையில் நீட் தேர்வை முறைகேடாக ஆள் மாறாட்டம் மூலம் எழுதியவர்களின் புகைப்படங்களை வெளியிட்டனர். 2 மாணவிகள் மற்றும் 8 மாணவர்களின் போட்டோக்களை போலீசார் வெளியிட்டதுடன் அவர்கள் பற்றிய விவரங்கள் தெரிந்தால் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று கூறி இருந்தனர். இதற்காக 9443884395 என்ற செல்போன் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என்று கூறி இருந்தனர். போட்டோவில் இருப்பவர்களை தேடி கண்டு பிடிக்க வெளி மாநிலங்களிலும் போலீசாருக்கு அனுப்பி வைத்தனர்.

ஆதாருக்கு அனுப்பி வைப்பு
டெல்லி, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான் ஆகிய 5 மாநிலங்களில் உள்ள சில நீட் தேர்வு மையங்களிலேயே ஆள் மாறாட்டம் செய்து 10 பேரும் தேர்வு எழுதி இருந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து அந்த மாநிலங்களிலும் போலீசார் தேடுதல் வேட்டை முடுக்கி விட்டுள்ளனர். ஆதார் மையங்களில் இவர்களின் புகைப்படம் மற்றும் முகவரி ஏதும் உள்ளதா? என்பது பற்றியும் ஆய்வு செய்ய அனுப்பி வைக்கப்பட்டது.

விவரங்கள் இல்லை
இந்நிலையில் நீட் தேர்வில் மோசடி செய்து தேர்வு எழுதிய மாணவ மாணவிகளின் 10 புகைப்படத்தை வைத்து அவர்களின் விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை என ஆதார் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications