இந்த வருடம்.. ஒரே ஒரு முறைதான் நீட் தேர்வு நடத்தப்படும்.. மத்திய அமைச்சர் திட்டவட்டம்
டெல்லி: நடப்பு ஆண்டில் ஒரே ஒரு முறை மட்டுமே நீட் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய அரசு உறுதியாக தெரிவித்துள்ளது.
நீட் தேர்வு தொடர்பாக லோக்சபாவில் பாஜக எம்.பி லல்லு சிங் எழுப்பிய கேள்விக்கு மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.

அந்த பதிலில், மத்திய கல்வித்துறையின் கீழ் வரும் தேசியத் தேர்வு முகமை மூலம், நாடு முழுவதும் மருத்துவ பட்டபடிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வினை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் ஆலோசனையுடன் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டிற்கான நீட் தேர்வு ஒரே ஒரு முறை மட்டுமே நடத்தப்படும். ஒரே ஆண்டில் பல முறை நடத்தப்படுவதாக முடிவு செய்யவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட 11 மொழிகளில் நடத்தப்படுகிறது நீட் தேர்வு. இவ்வாண்டு வரும் ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி நடத்தப்படும் என்று முன்னதாக அறிவிப்பு வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஆண்டு 13 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். நீட் தேர்வுக்கான விண்ணப்பங்கள் பெறத் தொடங்கியதும், தேர்வுக்கான பாடத்திட்டம், வயது உள்ளிட்ட தகுதிகள், இட ஒதுக்கீடு, தேர்வு கட்டணம், தேர்வு மையங்கள் உள்ளிட்ட விவரங்கள் விரைவில் வெளியிடப்படும்.












Click it and Unblock the Notifications