நீட், நெட் உள்ளிட்ட தேர்வுகளில் முறைகேடு செய்தால் ரூ1 கோடி அபராதம், 10 ஆண்டு ஜெயில்- சட்டம் அமலானது!
டெல்லி: நீட் உள்ளிட்ட பொதுத் தேர்வுகளில் முறைகேடு செய்தால் அதிகபட்சமாக 10 ஆண்டு சிறை தண்டனை, ரூ1 கோடி அபராதம் விதிக்க வகை செய்யும் பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகள் தடுப்பு) 2024 சட்டத்தை அமலுக்கு கொண்டு வருவதற்கான அறிவிக்கையை மத்திய அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
மத்திய அரசின் தேசியத் தேர்வு முகமையானது நீட், நெட் உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளளை நடத்தி வருகிறது. ஆனால் இந்த தேர்வுகள் அனைத்திலும் பெருமளவு முறைகேடுகள் நடைபெறுகின்றன. நடப்பாண்டில் நீட் தேர்வு நடத்தப்பட்டு பலர் முறைகேடுகளில் கைது செய்யப்பட்டுள்ளனர். நெட் தேர்வு நடத்தப்பட்ட நிலையில் ரத்து செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கும் இது பெரும் நெருக்கடியாக அமைந்துவிட்டது.

இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகள் தடுப்பு) 2024 சட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிவிக்கையை மத்திய அரசு நேற்று வெளியிட்டது.
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) மற்றும் பணியாளர் தேர்வாணையத்தால் (எஸ்எஸ்சி) நடத்தப்படும் ஆட்சேர்ப்புத் தேர்வுகள், நீட், ஜேஇஇ, கியூஇடி, நெட் போன்ற நுழைவுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவுகள், முறைகேடுகள் மற்றும் திட்டமிடப்பட்ட முறைகேடுகளைத் தடுக்க "பொதுத் தேர்வுகள் (நியாயமற்ற வழிமுறைகள் தடுப்பு) சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பான மசோதா கடந்த பிப்ரவரியில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
தற்போது இந்த சட்டத்தை அமல்படுத்தும் வகையில் மத்திய அரசு வெள்ளிக்கிழமையன்று அறிவிக்கையை வெளியிட்டிருக்கிறது. இந்த சட்டத்தின் படி நீட் தேர்வு உள்ளிட்டவைகளில் முறைகேடு செய்தால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்; குறைந்தபட்சம் ரூ1 கோடி வரை அபராதமும் விதிக்கப்படும்.
தனிநபரோ அல்லது குழுவோ அல்லது தேர்வு நடத்தும் அதிகாரிகளோ, நிறுவனங்கோ இத்தகை குற்றங்களைச் செய்தால் 5 ஆண்டுகளுக்கு குறையாமல் அதிகபட்சமாக 10 ஆண்டு வரையில் சிறை தண்டனை விதிக்கிறது இந்த சட்டம். அத்துடன் ரூ1 கோடிக்கும் குறையாத அபராதம் விதிக்கவும் வகை செய்கிறது இந்த சட்டம்.
நீட் உள்ளிட்ட தேர்வுகளில் முறைகேடுகளில் ஈடுபடும் நிறுவனங்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்படும். இத்தகைய தேர்வு முறைகளில் ஈடுபடுவோருக்கு ஜாமீன் கிடைக்காது. யுபிஎஸ்சி, ஸ்டாப் செலக்ஷன் கமிஷன், ரயில்வே, வங்கி தேர்வுகள் மற்றும் தேசியத் தேர்வு முகமைகள் நடத்தும் தேர்வுகளில் நடைபெறும் முறைகேடுகளில் ஈடுபட்டோருக்கு இந்த சட்டத்தின் கீழ் தண்டனை வித்இக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications