காஷ்மீர் பிரச்சனையை ஐ.நாவுக்கு நேரு கொண்டு சென்றது இமாலய தவறு: அமித்ஷா
Recommended Video
டெல்லி: ஜம்மு காஷ்மீர் பிரச்சனையை ஐ.நா.வுக்கு ஜவஹர்லால் நேரு கொண்டு சென்றது இமாலய தவறு என உள்துறை அமைச்சரும் பாஜக தலைவருமான அமித்ஷா விமர்சித்துள்ளார்.
டெல்லியில் தேசிய பாதுகாப்பு தொடர்பான கருத்தரங்கில் அமித்ஷா பேசியதாவது:
பாகிஸ்தானுடனான யுத்தத்தின் போது நேரு ஒருதலைப்பட்சமாக யுத்த நிறுத்தத்தை அறிவித்ததால்தான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் உருவானது, 1948-ல் காஷ்மீர் பிரச்சனையை ஐநாவுக்கு நேரு கொண்டு சென்றது இமாலயத் தவறு. அது இமயமலையைவிட மிகப் பெரும் தவறு.

ஜம்மு காஷ்மீரில் பஞ்சாயத்து தேர்தல் விரைவில் நடத்தப்பட உள்ளது. ஜம்மு காஷ்மீரில் மூன்றடுக்கு பஞ்சாயத்து முறை முழு அளவில் செயல்படத் தொடங்கும்.
காஷ்மீரில் சூஃபி சாதுக்களின் கலாசாரம் முற்றிலுமாக அழிக்கப்பட்ட போது மனித உரிமை பேசும் காவலர்கள் எங்கே போனார்கள்? ஜம்மு காஷ்மீரில் இருந்து பண்டிட்டுகள் விரட்டி அடிக்கப்பட்ட போது அவர்கள் எங்கே போனார்கள்?
அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவால் காஷ்மீர் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். காஷ்மீர் விவகாரத்தில் யார் தவறு இழைத்தார்களோ அவர்களே வரலாற்றையும் எழுதினார்கள். அதனால் உண்மைகள் மூடி மறைக்கப்பட்டன.
அந்த வரலாற்றை திருத்தி எழுதுகிற நேரம் இது. இப்போதும் கூட 370-வது பிரிவு பற்றியும் காஷ்மீர் குறித்தும் வதந்திகள் கிளப்பிவிடப்படுகின்றன. அவற்றுக்கு விளக்கம் சொல்ல வேண்டியது மிக முக்கியம். காஷ்மீரில் எந்த ஒரு கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை. 370-வது பிரிவு நீக்கப்பட்டதை ஒட்டுமொத்த சர்வதேச சமூகமும் ஆதரிக்கிறது.
அடுத்த 5 அல்லது 7 ஆண்டுகளில் ஜம்மு காஷ்மீர் மிகவும் வளர்ந்த பிராந்தியமாக உருவெடுக்கும். இதற்கு காரணம் ஆகஸ்ட் 5-ந் தேதி 370-வது பிரிவை நீக்குவது என பிரதமர் மோடி எடுத்த முடிவுதான். காஷ்மீரில் 196 காவல் நிலையங்களில் 8-ல் தான் ஊரடங்கு அமலில் உள்ளது. அதுவும் கூட 5 அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் ஒன்று கூடத்தான் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
காஷ்மீரில் 41,800 பேர் இதுவரை பலியாகி உள்ளனர். ஆனால் யாரும் மனித உரிமைகள் மீறல் என எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. தொலைபேசி தொடர்புகள் செயல் இழக்கப்பட்டது கூட மனித உரிமை மீறல்கள் என புலம்புகின்றனர். அரசியல் சானத்தின் 370-வது பிரிவு நீக்கமானது இந்தியாவின் ஒற்றுமையை வலிமைப்படுத்தியிருக்கிறது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.












Click it and Unblock the Notifications