வந்தே பாரத் ரயிலையும் விட்டுவைக்கல.. முன்பதிவு பெட்டியை மொத்தமாக ஆக்கிரமித்த மக்கள்.. திணறிய பயணிகள்
டெல்லி: இந்தியாவின் சொகுசு ரயில்களில் முக்கியமானதாக இருக்கும் வந்தே பாரத் ரயில் ஒன்றில் முன்பதிவு செய்யாத பயணிகள் ஏறி ஆக்கிரமித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நமது நாட்டில் ஏழைகள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் விரும்பி பயணிக்கும் பொது போக்குவரத்தாக ரயில் இருக்கிறது.. நாட்டின் முக்கிய பகுதிகளுக்கு கனெக்ஷன் இருக்கிறது.. செலவும் குறைவு என்பதால் பலரும் ரயிலில் பயணிக்கவே விரும்புகிறார்கள்.

இருப்பினும், சமீப காலங்களாக ரயில்வே துறை தொடர்பாக வரும் செய்திகள் எல்லாமே மோசமாக இருக்கிறது. குறிப்பாக முன்பதிவு பெட்டிகளில் முன்பதிவு செய்யாத பயணிகள் ஏறி ஆக்கிரமிப்பது பெரும் பிரச்சினையாக மாறி இருக்கிறது.
ரயில் பெட்டிகள்: அதாவது நெடுந்தூரம் பயணிக்கும் ரயில்களில் முன்பதிவு செய்யாதவர்களும் பயணிக்க ஏதுவாக ரயிலின் இரு புறமும் முன்பதிவு செய்யாத பெட்டிகள் இணைக்கப்பட்டு இருக்கும். இருப்பினும், இப்போதெல்லாம் பயணிகள் அதைத் தாண்டி முன்பதிவு செய்த பெட்டிகளிலும் ஏறி ஆக்கிரமித்துக் கொள்கிறார்கள் என்பதே புகாராகும். முதலில் நான் ஏசி பெட்டிகளில் தான் இதுபோல ஏறி ஆக்கிரமிப்பதாகப் புகார்கள் எழுந்தன.
அதன் பிறகு 3rd ஏசி, 2nd ஏசி அவ்வளவு ஏன் முதலாம் வகுப்பு ஏசி பெட்டிகளிலும் கூட பயணிகள் இதுபோல ஏறி ஆக்கிரமித்துக் கொள்வதாகப் புகார்கள் எழுந்தன. இது தொடர்பான வீடியோக்களும் இணையத்தில் டிரெண்டாகின. இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க ரயில்வே அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தாலும் கூட இவை தொடர்ந்து கொண்டே இருக்கிறது.
வந்தே பாரத்: பொதுவாக எக்ஸ்பிரஸ் ரயில்களில் தான் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால், இதுவரை நடந்த சம்பவங்களை எல்லாம் தூக்கிச் சாப்பிடும் விதமாக இப்போது வந்தே பாரத் ரயில்களிலேயே இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. நாட்டின் அதிநவீன ரயிலான வந்தே பாரத்தில் இதுபோல முன்பதிவு செய்யாத பயணிகள் ஏறி ஆக்கிரமித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
உத்தரப் பிரதேசத்தின் லக்னோ மற்றும் உத்தரகண்ட்டின் டெராடூனுக்கும் இடையே வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த வழித்தடத்தில் இயங்கும் ரயிலில் தான் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பான வீடியோவும் கூட இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் வந்தே பாரத் ரயில் ஒன்றில் பயணிகள் நின்றபடி இருப்பது தெளிவாகத் தெரிகிறது. உள்ளே பயணிகள் நிற்க முடியாத அளவுக்குக் கூட்டம் இருப்பதும் அதில் தெளிவாகத் தெரிகிறது.
ஏசி வசதி: வந்தே பாரத் ரயில்களைப் பொறுத்தவரை அவை முழுக்க முழுக்க ஏசி வசதி கொண்டவை.. மேலும், மற்ற ரயில்களைப் போல இல்லாமல் அதில் முன்பதிவு இல்லாத பெட்டிகள் எதுவும் இல்லை.. முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே இந்த ரயில்களில் பயணிக்க முடியும். அப்படி இருக்கும் போது இவ்வளவு பயணிகள் எப்படி ஏறினார்கள் என்பதே பலரது கேள்வியாக இருக்கிறது.
வீடியோ: இது தொடர்பான வீடியோ இணையத்தில் டிரெண்டாகி இருக்கும் நிலையில், பலரும் இது குறித்து தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர். ரயில் நிலையங்களில் மெட்ரோவில் இருப்பதைப் போன்ற முறையைக் கொண்டு வர வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி உள்ளனர். அப்போது தான் டிக்கெட் இல்லாமல் யாராலும் உள்ளே வர முடியாது என்று ஒருவர் கூறியுள்ளார்.
பொதுமக்களுக்கு உதவும் எக்ஸ்பிரஸ் ரயில்களை அதிகம் விடாமல் அதிக கட்டணம் வசூலிக்கும் வந்தே பாரத் ரயில்களுக்கு அரசு முக்கியத்துவம் தருவதால் மிடில் கிளாஸ் மக்களால் டிக்கெட் வாங்க முடிவதில்லை என்றும் அதுவே இந்தச் சிக்கலுக்குக் காரணம் என்றும் மற்றொரு தரப்பினர் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications