"இனி விமான டிக்கெட் ரத்து செய்ய கட்டணமில்லை.. ஆனால் ஒரே ஒரு கண்டிஷன்.." மத்திய அரசு முக்கிய அறிவிப்பு
டெல்லி: விமான டிக்கெட் புக் செய்யும்போது ஒரு சின்ன தவறு நடந்துவிட்டது என்றாலும் கூட மிகப் பெரிய தொகையை ரத்து அல்லது கேன்சல் செய்ய செலுத்த வேண்டி இருக்கிறது. இதற்கிடையே அந்த நிலையை மாற்றும் வகையில் இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ முக்கியமான உத்தரவைப் பிறப்பித்துள்ளது. இது விமானப் பயணிகளுக்கு நல்ல செய்தியாகவே இருக்கிறது.
இந்திய விமானப் போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையமான டிஜிசிஏ, விமான டிக்கெட் ரத்து மற்றும் மாற்றங்களைப் பயணிகளுக்கு எளிமையாக்கும் வகையில் சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. விமான டிக்கெட்களுக்கான பணத்தைத் திரும்பப் பெறும் விதிமுறைகளை மாற்றியமைத்துள்ளது.

48 மணி நேரம்
புதிய விதிமுறைகளின்படி, பயணிகள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்த 48 மணி நேரத்திற்குள் எந்தவொரு கூடுதல் கட்டணமும் இன்றி விமான டிக்கெட்டை ரத்து செய்யலாம் அல்லது மாற்றிக்கொள்ளலாம். அத்துடன் விமான டிக்கெட்களை ரத்து செய்தால் 14 வேலை நாட்களுக்குள் பணத்தைத் திரும்பத் தர வேண்டும்.. மேலும், பெயரில் சிறிய பிழைகள் எதாவது இருந்தால் புக் செய்த 24 மணி நேரத்திற்குள் அந்த பிழைகளைச் சரிசெய்யவும் கட்டணம் வசூலிக்கக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது..
முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான பணத்தைத் திரும்பப் பெறுவதில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில் இந்த மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
இண்டிகோ
கடந்த டிசம்பர் 2025இல் நடந்த இண்டிகோ விமானச் சேவை பாதிக்கப்பட்ட போது பல பயணிகள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டனர். இதன் காரணமாகவே இந்த புதிய விதிமுறைகளை உருவாக்குவது அவசியமானது என்று டிஜிசிஏ கருதியது. இது தொடர்பான அறிவிப்பை டிஜிசிஏ வெளியிட்டுள்ளது.
அதன்படி விமான நிறுவனங்களிடம் நேரடியாக முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை, சில நிபந்தனைகளுடன், 48 மணி நேரத்திற்குள் எந்தக் கட்டணமும் இல்லாமல் ரத்து செய்யவோ அல்லது மாற்றியமைக்கவோ முடியும். அவசர கதியில் அல்லது தவறுதலாக டிக்கெட் புக் செய்தால் பயணிகளுக்கு தங்கள் திட்டங்களை மறுபரிசீலனை செய்யும் வாய்ப்பை இது அமைக்கிறது.
பெயர்களில் தவறு
ஒருவேளை பெயர்களில் சிறிய தவறு எதாவது ஏற்பட்டால்.. பெயர் திருத்தங்களும் செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்த 24 மணி நேரத்திற்குள் விமான நிறுவனத்தின் தளத்தில் பெயரைத் திருத்திக் கொள்ளலாம். எந்தவொரு கட்டணமும் இல்லாமல் பெயரை திருத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும். இது தேவையற்ற கட்டணங்களைத் தவிர்க்கிறது.
ஏஜென்டுகள் அல்லது மைக் மை டிரிப் போன்ற 3ம் தரப்பு தளங்கள் மூலம் வாங்கிய டிக்கெட்டுகள் மூலமாகவே இப்போது பலரும் விமான டிக்கெட் புக் செய்கிறார்கள். அப்படி புக் செய்வோர் கேன்சல் செய்யும்போது பணத்தைத் திரும்பப் பெறுவது சவாலாக அமைகிறது. இதிலும் தலையிட்டு டிஜிசிஏ தெளிவுபடுத்தியுள்ளது. அதாவது இதுபோல ஏஜெண்டு அல்லது 3ம் தரப்பு தளங்கள் மூலம் டிக்கெட் புக் செய்தாலும், அங்கும் பணத்தைத் திரும்பப் பெறும் முழுப் பொறுப்பும் இனி விமான நிறுவனங்களுக்கே இருக்கிறது.. மேலும், புதிய விதிகளில் டிக்கெட் ரத்து செய்தால் 14 வேலை நாட்களுக்குள் பணத்தைத் திரும்பத் தர வேண்டும்.
மருத்துவ காரணம்
மருத்துவ அவசரங்களுக்காக டிக்கெட்டை ரத்து செய்வதற்கான விதிகளும் மாற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக முழு விவரங்கள் வெளியாகவில்லை என்றாலும் மருத்துவக் காரணங்களால் பயணத் திட்டங்களை ரத்து செய்யும் பயணிகளுக்கு இது உதவும்.
அதேநேரம் புக் செய்து 48 மணி நேரம் ஆகிவிட்டது என்றால் அதன் பிறகு விமான நிறுவனத்தின் கொள்கையின்படியே டிக்கெட் சேன்ஞ் அல்லது ரத்து கட்டணம் பிராசஸ் செய்யப்படும் என ஒழுங்குமுறை ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது. இதைப் பயணிகள் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும், பெயரில் உள்ள பிழைகளையும் மாற்ற 24 மணி நேரத்திற்குள் கட்டணமின்றிச் சரிசெய்யலாம்.












Click it and Unblock the Notifications