கண்ணுக்கே தெரியாது..சீனாவுக்கு செக்! எல்லையில் இந்தியா அமைக்கும் புதிய சாலை.. ஏன் முக்கியம் தெரியுமா
டெல்லி: சீனாவுடனான எல்லையை ஒட்டியுள்ள வடக்கு (northernmost military) ராணுவ தளம் அமைந்துள்ள பகுதியில் இந்தியா சாலை ஒன்றை அமைத்து வருகிறது. மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வசதிகளுடன் உருவாகி வரும் இந்த சாலையை சீனாவில் இருந்து பார்த்தால் இப்படி ஒரு சாலை இருப்பதே தெரியாதாம்.
ஆசியாவில் யாராலும் அசைக்க முடியாத வல்லமை பொருந்திய நாடாக உருவெடுக்க வேண்டும் என்பது சீனாவின் கனவு. சீனாவின் இந்த கனவுக்கு பெரும் சவால் விடுக்கும் நாடாக இந்தியா உள்ளது. ஆசியாவில் மட்டும் இன்றி சர்வதேச அளவிலும், பொருளாதார ரீதியாக இந்தியா சீனாவுக்கு கடும் போட்டியாக உள்ளது. இதனால், இந்தியா மீது எரிச்சல் அடையும் சீனா, இந்தியாவுக்கு எதிராக பல்வேறு தந்திரங்களை கையாண்டு வருகிறது.

இந்தியாவை சுற்றியுள்ள நாடுகளை தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு இந்தியாவை பூகோள ரீதியில் நெருக்கடி கொடுக்க முயற்சித்து வருகிறது. இதற்காக இலங்கை, மாலத்தீவு உள்பட இந்தியாவின் நட்பு நாடுகளுக்கு கடனை அள்ளி கொடுத்து வளைக்க முயன்று வருகிறது. வளர்ச்சி திட்டங்கள் என்ற பெயரில் அந்த நாடுகளில் எல்லாம் சீனா தனது பல பில்லியன் மதிப்பில் தனது முதலீட்டை குவித்து வருகிறது.
இது ஒருபக்கம் என்றால் எல்லையிலும் இந்தியாவுக்கு குடைச்சல் கொடுத்து வருகிறது. இந்தியாவின் ஒருங்கிணைந்த மாநிலாமான அருணாசல பிரதேசத்தை தெற்கு திபெத் என்று உரிமை கொண்டாடும் சீனா, அவ்வப்போது இந்திய எல்லைக்குள்ளும் அத்துமீறி அடாவடி செய்கிறது. இதற்கு இந்தியாவும் சரியான பதிலடியை கொடுக்கிறது. கடந்த 2020-ம் ஆண்டு நள்ளிரவில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா - சீனா வீரர்கள் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.
இந்த சண்டையில் இரு நாட்டு வீரர்களும் உயிரிழந்தனர். இதன்பின்னர், பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு படைகள் வாபஸ் பெறப்பட்டன. எனினும், தொடர்ந்து எல்லையில் பதற்ற நிலை காணப்படுகிறது. இது ஒருபக்கம் என்றால் இந்திய எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் சீனா தனது உள்கட்டமைப்புகளை வலுப்படுத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக இந்தியாவும் எல்லைப்பகுதிகளின் நவீன வசதிகளுடன் சாலை உள்பட பல்வேறு உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
குறிப்பாக அசல் எல்லை கோட்டு பகுதியில் 3,488 கி.மீ. தொலைவுக்கு உட்கட்டமைப்பை மேம்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த உட்கட்டமைப்பு வளர்ச்சி பணியில் அடுத்த 2 முதல் 3 ஆண்டுகளில் சீனாவை, இந்தியா வீழ்த்தி விடும் என்று ராணுவ அதிகாரிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் தான், இந்தியா சீனாவுடனான எல்லையை ஒட்டியுள்ள வடக்கு (northernmost military) ராணுவ தளம் அமைந்துள்ள பகுதியில் சாலை ஒன்றை அமைத்து வருகிறது.
இந்த சாலை மேம்படுத்தப்பட்ட பாதுகாப்பு வசதிகளுடன் உருவாகி வருகிறது. இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் சீனாவில் இருந்து பார்த்தால் இப்படி ஒரு சாலை இருப்பதே தெரியாது. அந்த அளவு யுக்திகளை கையாண்டு இந்தியா இந்த சாலையை கட்டமைத்து வருகிறது. இந்த சாலை மூலமாக ராணுவ தளவாடங்கள் கொண்டு செல்லவும் ராணுவ வீரர்கள் எல்லையோர பகுதிகளுக்கு செல்லவும் பயன்படுத்தப்படும். விரைவில் இந்த சாலைப்பணிகள் முடிந்து பயன்பாட்டுக்கு வந்து விடும் என்றும் பல்வேறு ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன.












Click it and Unblock the Notifications