வழிக்கு வந்த ட்விட்டர்.. டெல்லி ஹைகோர்ட் விமர்சனத்தை அடுத்து.. இந்திய குறைதீர்ப்பு அதிகாரி நியமனம்!
டெல்லி: ட்விட்டர் நிறுவனம் இந்திய குறைதீர்ப்பு அதிகாரியாக வினய் பிரகாஷ் என்பவரை நியமனம் செய்துள்ளது.
இந்தியாவின் புதிய ஐடி விதிகளை பின்பற்றவில்லை என்று ட்விட்டர் நிறுவனம் மீது மத்திய அரசு கடும் கண்டங்களை தெரிவித்து வந்தது. இது தொடர்பாக முன்னாள் ஐடி அமைச்சர் ரவி சங்கர் பிரசாத்திற்கும் ட்விட்டர் நிறுவனத்திற்கும் இடையில் மோதலும் ஏற்பட்டது.
அதேபோல் புதிய ஐடி அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இதேபோல் ட்விட்டர் நிறுவனம் மீது விமர்சனங்களை வைத்தார். புதிய ஐடி விதியின்படி ட்விட்டர் நிறுவனம் நோடல் அலுவலர், தொடர்பு அலுவலர், குறைதீர்ப்பு அலுவலர் என்று மூன்று பேரை நியமிக்க வேண்டும். மூவரும் இந்தியாவில் வசிக்கும் இந்தியராக இருக்க வேண்டும்.

குறைதீர்ப்பு அதிகாரி
இதில் குறைதீர்ப்பு அதிகாரியாக தற்காலிகமாக ட்விட்டர் நியமித்த தர்மேந்திரா சாத்தர் அப்பதவியில் இருந்து விலகிய நிலையில் ட்விட்டர் நிறுவனம் கலிபோர்னியாவின் ஜெர்மி கேசலை குறைதீர்ப்பு அதிகாரியாக நியமித்தது. ஆனால் விதிப்படி இந்த பொறுப்பு இந்தியாவில் உள்ள இந்தியருக்கே வழங்கப்பட வேண்டும். ஆனால் ட்விட்டர் நிறுவனம் இதை பின்பற்றாமல் இருந்தது.

ட்விட்டர்
ஐடி விதியை ட்விட்டர் நிறுவனம் பின்பற்றாத நிலையில், அந்த நிறுவனத்தின் சட்ட பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு டெல்லி ஹைகோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வருகிறது. நீதிபதி ரேகா பள்ளி கடந்த வாரம் இந்த வழக்கை விசாரித்தார். இந்த வழக்கில், மத்திய அரசின் புதிய ஐடி விதிகளை பின்பற்றவில்லை என்றால் ட்விட்டர் நிறுவனத்திற்கு சட்ட பாதுகாப்பு வழங்க முடியாது, அந்த நிறுவனத்திற்கு எதிராக மத்திய அரசு நடவடிக்கை எடுத்தால் அதை தடுக்க மாட்டோம் என்று டெல்லி ஹைகோர்ட் கூறியுள்ளது.

பதில்
இந்த வழக்கில் பதில் அளித்த ட்விட்டர் நிறுவனம், இன்னும் 8 வாரங்களில் இது தொடர்பாக முடிவு எடுப்போம். இதற்காக இந்தியாவில் அலுவலகம் ஒன்றை திறக்கும் முடிவிலும் இருக்கிறோம். அனைத்து ஐடி விதிகள் தொடர்பான குறைகளையும் தீர்க்கும் வகையில் இந்த அலுவலகம் அமைக்கப்படும், என்று கூறியது. இந்த நிலையில் தற்போது ட்விட்டர் நிறுவனம் இந்திய குறைதீர்ப்பு அதிகாரியாக வினய் பிரகாஷ் என்பவரை நியமனம் செய்துள்ளது.

அதிகாரி
இவர் இந்தியாவை சேர்ந்தவர். பெங்களூரில் 4th Floor, The Estate, 121 Dickenson Road, Bangalore 560 042 என்ற விலாசத்தில் இவரை தொடர்பு கொள்ளலாம் என்று ட்விட்டர் நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒரு பக்கம் இவர் குறைதீர்ப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டாலும், கலிபோர்னியாவின் ஜெர்மி கெசலும் குறைதீர்ப்பு அதிகாரியாக தொடர்வார்.

ரிப்போர்ட்
முன்னதாக ஐடி விதிகளை பின்பற்றுவது தொடர்பாக ஜூலை 11க்குள் அறிக்கை அளிப்போம் என்று ட்விட்டர் நிறுவனம் உறுதி அளித்தது. இதையடுத்து இன்று அதற்கான ரிப்போர்ட்டையும் டெல்லி ஹைகோர்ட்டில் அந்த நிறுவனம் தாக்கல் செய்தது. மே 26, 2021 முதல் ஜூன் 25, 2021 வரை ட்விட்டர் நிறுவனம் ஐடி விதிகளை பின்பற்றியதற்கான இணக்க அறிக்கையை சமர்ப்பித்துள்ளது.












Click it and Unblock the Notifications