டூ இன் ஒன்.. பாஜகவின் 2024 மக்களவை தேர்தல் அறிக்கை! நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையில் கிடைத்த க்ளூ
டெல்லி: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்த பட்ஜெட் உரையில் தெரிவித்த விசயங்களின் மூலம் 2024 மக்களவைத் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்படும் வாக்குறுதிகளுக்கான க்ளூ கிடைத்து உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசின் ஆட்சிகாலம் விரைவில் முடிவடைந்து இன்னும் 2 மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. 2024 தேர்தல் நெருங்கி வரும் நிலையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று நாடாளுமன்ற மக்களவையில் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நாட்டின் வரி வருவாய், பொருளாதார சூழல் தொடர்பாக பேசிய அவர், பல்வேறு துறைகள் சார்ந்த அறிவிப்புகள், எதிர்கால திட்டங்கள் குறித்து பேசினார்.

58 நிமிடங்கள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் பல்வேறு திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு குறித்த விபரங்களும் இடம்பெற்றன. அதே சமயம் தேர்தல் நிறைவடைந்து புதிய அரசு நாட்டில் ஆட்சி அமைத்த பின்னர் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்படுவதுடன், அதற்கான நிதிகள் உயர்த்தி வழங்கப்படும். இன்றைய உரையில் அடுத்த பட்ஜெட்டுக்கு இடைப்பட்ட காலத்திற்கு தேவையான திட்டங்களுக்கான நிதி அறிவிப்புகள் மட்டுமின்றி, அடுத்த 5 ஆண்டுகள், அடுத்த 10 ஆண்டுகளுக்கான தொலைநோக்கு திட்டங்கள் போல் சிலவற்றை அறிவித்தார்.
பொதுவாக தேர்தல் சமயத்தில் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையின் மூலமாக வாக்குறுதிகளை அள்ளி வீசுவது வழக்கம். அதை நினைவுபடுத்தும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் இன்றைய பட்ஜெட் உரை அமைந்தது. பாஜகவின் 2024 மக்களவைத் தேர்தலுக்கான அறிக்கை எப்படி இருக்கும் என பட்ஜெட் உரையின் மூலம் ஒரு க்ளூ கிடைத்து இருக்கிறது.
லட்சத்தீவு சுற்றுலாவுக்கு முக்கியத்துவம், உள்நாட்டு சுற்றுலாவை மேம்படுத்தவும் வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் முன்னுரிமை, தொழில் தொடங்க வட்டியில்லாக் கடன் வழங்குவதற்காக ₹1 லட்சம் கோடியில் புதிய நிதியம் அமைக்கப்படும், பால் உற்பத்தியை அதிகரிக்க புதிய திட்டம், அடுத்த 5 ஆண்டுகளில் இதுவரை இல்லாத அளவுக்கு வளர்ச்சி இருக்கும், வளர்ந்த நாடு என்ற இந்தியாவின் கனவு 2047க்குள் நனவாகும் என்பன போன்ற அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையை நினைவூட்டுகின்றன.
அதே சமயம், தேர்தலுக்கு முன் பெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசு குறைக்கும் என்ற பேச்சுக்கள் இருந்த நிலையில் அதுபற்றி நிர்மலா சீதாராமன் எதுவும் பேசவில்லை. அதே போன்று வருமான வரி குறைக்கப்படும் என மக்கள் எதிர்பார்த்த நிலையில் ஏற்கனவே இருக்கும் நிலை தொடரும் என்று நிதியமைச்சர் அறிவித்து உள்ளதும் ஏமாற்றத்தை அளித்து உள்ளது. பெட்ரோல், டீசல் தொடர்பாக பாஜகவின் தேர்தல் அறிக்கையிலாவது தகவல் இருக்குமா என மக்கள் எதிர்பார்த்து காத்து உள்ளார்கள்.












Click it and Unblock the Notifications