டெல்லி மேலிடத்திற்கு போன நிர்மலா சீதாராமனின் ரிப்போர்ட்!.. தலைநகர் விரைந்த அண்ணாமலை.. நடந்தது என்ன?
டெல்லி: அதிமுகவுடன் கூட்டணி வைத்தால்தான் தமிழக பாஜகவின் எதிர்காலத்திற்கு நல்லது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் அதிமுக பாஜக இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் இரு தரப்பினரிடையே கூட்டணி இருக்குமா என சந்தேகம் எழும் அளவுக்கு இரு தரப்பும் ஒருவரை ஒருவர் விமர்சித்து கொண்டனர்.

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் அண்ணா துரை குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்திருந்தார். அவர் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரிடம் மன்னிப்பு கேட்டதாக ஒரு தவறான தகவலை அண்ணாமலை தெரிவித்தார் என பலர் கண்டனங்களை தெரிவித்தனர்.
இந்த நிலையில் ஏற்கெனவே மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசிய போதே தேசிய பாஜக தலைமையிடம் அதிமுக தரப்பு முறையிட்டு அவரை அடக்கி வைக்குமாறு தெரிவித்திருந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால் அண்மையில் அண்ணா குறித்து அண்ணாமலை பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.
இது அதிமுகவினருக்கு பெரும் கோபத்தையும் உண்டாக்கியது. இந்த நிலையில் அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் இனி எக்காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என முடிவு எடுக்கப்பட்டது. இது பாஜகவுக்கு அதிர்ச்சியை கொடுத்தியுள்ளது. தென் மாநிலங்களில் பாஜகவுக்கு தோழைமை கட்சியாகவும் பலமாகவும் இருந்தது அதிமுக மட்டுமே. தற்போது அந்த கட்சியும் விலகி சென்றுவிட்டதால் பாஜகவுக்கு தமிழகத்தில் பெரிய இழப்பு ஏற்படும் என தெரிகிறது.
இந்த நிலையில் அதிமுகவை சமாதானப்படுத்த ரகசிய முயற்சிகள் செய்தும் பலனளிக்கவில்லை என்றே தெரிகிறது. இதனால் தமிழகத்தில் அதிமுக- பாஜக கூட்டணி இடையே மோதல் போக்கு ஏற்பட்டதற்கு உண்மையான காரணத்தை அறியும் பொறுப்பை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து நிர்மலா சீதாராமன் தமிழக பாஜக மூத்த நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் கருத்துகளை கேட்டறிந்தார். ஒவ்வொரு பாஜக நிர்வாகியிடமும் நிர்மலா சீதாராமன் பல்வேறு கேள்விகளை எழுப்பி அதை அறிக்கையாக தயாரித்து பாஜக மேலிடத்தில் வெள்ளிக்கிழமை ஒப்படைத்தார்.
அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: அதிமுக கூட்டணி மற்றும் பாஜக எதிர்காலம் ஆகியவை தொடர்பாக நிர்வாகிகளின் ஒட்டுமொத்த கருத்துகளை அந்த அறிக்கையில் அவர் குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் அது பாஜகவுக்கு பயனுள்ளதாக இருக்கும். இல்லாவிட்டால் தமிழகத்தில் பாஜகவுக்கு எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்காமல் போகும் என நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருப்பதால் அதிமுகவுடன் கூட்டணி ஏற்பட முயற்சிகள் செய்யப்பட வேண்டும். அது வரை அதிமுகவையோ அவர்களுடைய தலைவர்களையோ யாரும் விமர்சிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதிமுகவுடன் கூட்டணியை ஏற்படுத்திக் கொள்ள அந்த தலைவர்களுடன் மீண்டும் பேச்சுவார்ததை நடத்தலாம். ஒரு வேளை அதிமுக ஏதாவது நிபந்தனைகளை விதித்தால் அதை பரிசீலனை செய்யலாம். அதிமுகவுடன் கூட்டணி வைத்தால்தான் தமிழக பாஜகவுக்கு நல்லது என நிர்மலா சீதாராமன் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
நிர்மலாவின் அறிக்கையை படித்து பார்த்த பாஜக மேலிடம் அண்ணாமலையை டெல்லிக்கு வருமாறு அழைத்துள்ளனர். இதனால் இன்று இரவும் நாளை காலையும் அண்ணாமலையிடம் கூட்டணியை புதுப்பிக்க என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகளை அமித்ஷாவும் நட்டாவும் அளிப்பார்கள் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications