வலுக்கும் ‘தென்மாநிலங்கள் புறக்கணிப்பு’ கோபம்- நிதி ஒதுக்கீட்டில் ஓரவஞ்சனையா? நிர்மலா சீதாராமன் பதில்
டெல்லி: தென் மாநிலங்கள் மத்திய அரசால் வஞ்சிக்கப்படுகிறது; பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் மத்திய அரசால் திட்டமிட்டே புறக்கணிக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளுக்கு லோக்சபாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று விளக்கம் அளித்தார்.
லோக்சபாவில் மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தென்னிந்திய மாநிலங்கள் புறக்கணிக்கப்படுவதாக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

திட்டமிட்ட புறக்கணிப்பு ஏன்?: தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்த அறிக்கையில், இந்த நிதிநிலை அறிக்கையில் தமிழகம் முழுமையாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பத்தாண்டு காலத்தில் பதினைந்து எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்கப்பட்டுள்ளது என்று நிதியமைச்சர் சொல்லி இருக்கிறார். 2015-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் சொல்லப்பட்டு, 2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 2024 வரைக்கும் கட்டுமானப் பணிகள் கூட நடக்காமல் கிடக்கிறதே... என்ன காரணம்? இந்தியாவின் மற்ற மாநிலங்களில் எல்லாம் எய்ம்ஸ் அமைத்தவர்கள், தமிழகத்தில் மட்டும் அமைக்காமல் போனதற்கு என்ன காரணம்? தமிழகத்துக்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை? தமிழக மக்கள் இளித்தவாயர்களா? பாஜகவுக்கு தமிழ்நாட்டில் ஓட்டு இல்லை என்பதுதான் காரணமா? என சரமாரியாக கேள்வி எழுப்பி இருந்தார்.
கன்னடர் வரி எல்லாம் வட இந்தியருக்கா?: கர்நாடகாவில் #SouthTaxMovement என்ற ஹேஷ்டேக்கில் சமூக வலைதளங்களில் தீவிர பிரசாரம் நடைபெறுகிறது. இதில் இணைந்துள்ள கர்நாடகா முதல்வர் சித்தராமையா, கன்னடர்கள் வியர்வை சிந்தி உழைத்து செலுத்தும் வரியானது வட மாநிலங்களுக்கு போகிறது. வட இந்திய மாநிலங்கள் நமக்கு முன் மாதிரியானவை அல்ல. உழைக்கின்ற கன்னடர்களுக்கு போதுமான சாப்பாடு கொடுக்காத நிலைமைதான் வரி பகிர்வில் இருந்து வருகிறது. இந்த நிலை மாற வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்தி பெல்ட் மாநிலங்களுக்கு முன்னுரிமை: கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார்,தென்னிந்திய மக்களின் வலியையும் வேதனையையும்தான் டிகே சுரேஷ் உள்ளிட்ட தலைவர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நாடு ஒரே தேசம்தான். ஆனால் நீங்கள் இந்தி பெல்ட் மாநிலங்களைத் தாண்டி பார்ப்பதே இல்லையே. மத்திய அரசின் பட்ஜெட்டில் சமமான நிதிப் பகிர்வு இல்லையே. மத்திய அரசுக்கு கர்நாடகா பெருமளவு வரி வருவாய் வசூலித்து வருகிறது. ஆனால் தென்னிந்திய மாநிலங்களுக்கு என முக்கியமான அறிவிப்புகள் எதுவுமே இந்த பட்ஜெட்டில் இடம் பெறவே இல்லையே. தென்னிந்திய மக்கள் புறக்கணிக்கப்படுவதாகவே கருதுகின்றனர். நாங்கள் இந்தியர்கள். இந்தியா ஒற்றுமையாக் இருக்க வேண்டும். பிராந்திய அடிப்படையிலான தனிநாடு கோரிக்கை பேச்சுகளுக்கே இடமில்லை என்றார்.
தென்னிந்திய தனிநாடு முழக்கம்: கர்நாடகா காங்கிரஸ் எம்பி டிகே சுரேஷ் கூறுகையில், தென்னிந்திய மாநிலங்கள் மூலமான வரி வருவாயை மத்திய பாஜக அரசு வட இந்திய மாநிலங்களுக்கு குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களுக்குதான் அள்ளி கொடுக்கிறது. இந்த நிலைமை நீடிக்கக் கூடாது.மத்திய அரசால் தென்னிந்திய மாநிலங்கள் வஞ்சிக்கப்படும் சூழ்நிலை நீடித்தால் அத்தனை தென்னிந்திய மாநிலங்களும் ஒருங்கிணைந்து இந்தி பேசும் மாநிலங்களில் இருந்து தனிநாடு கோரும் நிலைமை உருவாகும். எங்களிடம் வரி வசூல் செய்கிறது மத்திய அரசு. அப்படியானால் எங்களுக்கான உரிய பங்கைத்தான் தர வேண்டும். ஆனால் தென்னிந்திய மாநிலங்களுக்கு மத்திய பாஜக அரசு அநீதி இழைத்து வருகிறது. ஒவ்வொரு விவகாரத்திலும் தென்னிந்தியாவுக்கு அநீதிதான் மத்திய அரசு இழைத்து கொண்டே இருக்கிறது. கர்நாடகா மாநிலமானது ரூ4 லட்சம் கோடிக்கும் அதிகமான வரி வசூல் செய்து மத்திய அரசுக்கு கொடுக்கிறது. ஆனால் மத்திய அரசு எங்களுக்கு எவ்வளவு திருப்பித் தருகிறது? நாட்டின் 16-வது நிதிக் குழு இது குறித்து கவனம் செலுத்தாமல் போனால் தென்னிந்திய மக்கள் தங்களது உரிமைக் குரலை எழுப்பவே செய்வார்கள் என்றார்.
நிர்மலா சீதாராமன் விளக்கம்: இந்த நிலையில் லோக்சபாவில் இன்று காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் காட்டப்படுவது குறித்து கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், எந்த ஒரு நிதி குழுவும் தாங்களாகவே மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட வேண்டிய நிதி ஒதுக்கீடு குறித்து முடிவு செய்வது கிடையாது. நிதி குழுவினர் அனைத்து மாநிலங்களுக்கும் நேரில் செல்கின்றனர். அந்த ஆய்வுகளின் அடிப்படையில் அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுதான் இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. நிதி குழு என்ன பரிந்துரை வழங்குகிறதோ அதைத்தான் நானும் அறிவிக்கிறேன். செயல்படுத்துகிறேன். அனைத்து நிதி அமைச்சர்களும் இதையே பின்பற்றுகின்றனர். நிதி ஒதுக்கீட்டில் எங்களுக்கு வேண்டிய மாநிலம் , பிடிக்காத மாநிலம் என்ற பாகுபடு எதுவும் இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications