திமுக இரட்டை நிலைப்பாடு.. மனம் தளர வேண்டாம்.. சட்ட ரீதியாக.. பாஜகவினருக்கு நிர்மலா சீதாராமன் அட்வைஸ்
டெல்லி: தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா தனது ஒரு சமூக ஊடக பதிவின் காரணமாக நள்ளிரவில் கைது செய்யபட்டார். அவர் கைது கண்டனத்திற்குரியது என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக அரசை சாடியுள்ளார்.
தமிழ்நாடு பாஜக மாநிலச் செயலாளராக பதவி வகித்து வருபவர் எஸ்.ஜி சூர்யா. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு மிகவும் நெருக்கமானவராக அறியப்படும் எஸ்.ஜி சூர்யா ட்விட்டரிலும் தீவிரமாக செயல்படக்கூடியவர். தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குறித்து தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து டிவிட்டரில் பதிவிட்டு வருகிறார்.

அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறித்து ட்விட்டரில் எஸ்.ஜி.சூர்யா பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், 'கம்யூனிஸ்ட் கவுன்சிலரால் தூய்மை பணியாளரின் உயிர் பறிபோனது என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார் எனவும் பதிவிட்டிருந்தார். இந்த விவகாரம் குறித்து கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மதுரை காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், நேற்று இரவு சென்னை தி.நகர் இல்லத்தில் இருந்த பாஜக நிர்வாகி எஸ்.ஜி சூர்யாவை, மஃப்டியில் வந்த காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து அவரை இரவோடு இரவாக மதுரைக்கு அழைத்துச் சென்றனர். எஸ்.ஜி சூர்யா கைதுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிடோர் கடும் கண்டணம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் இவ்விவகாரம் குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து நிர்மலா சீதாராமன் கூறுகையில், " தமிழக பாஜக மாநில செயலாளர் எஸ்.ஜி சூர்யா தனது ஒரு சமூக ஊடக பதிவின் காரணமாக நள்ளிரவில் கைது செய்யபட்டார். அவர் கைது கண்டனத்திற்குரியது. மலக்குழி மரணங்களின் மீது முதல்வர் மு.க ஸ்டாலின் தகுந்த நடவடிக்கை எடுக்காமல் அதைப்பற்றி கேள்வி எழுப்பிய எஸ்.ஜி சூர்யாவை தண்டிக்க முயற்சி எடுப்பது நியாயமா?
முதல்வர் மு.க ஸ்டாலின் உடனடியாக சூர்யாவை விடுதலை செய்ய வேண்டும். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான கம்யூனிஸ்ட்டின் இரட்டை வேட நிலைப்பாடு, அதுவும் முக்கியமான சமூகப் பிரச்சினையில், வெட்ட வெளிச்சமாகி உள்ளது. பாஜக தொண்டர்கள் அனைவரும் மனம் தளராமல் சட்ட ரீதியாக இதனை எதிர்த்து போராடுவோம்" என்று பதிவிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications