2025 நிதியாண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு.. அல்வா கிண்டிய நிர்மலா சீதாராமன்!
டெல்லி: விரைவில் 2025-26ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில், பட்ஜெட் பணிகளை இறுதி செய்ததை குறிப்பிடும் வகையில் அல்வா கிண்டும் நடைமுறையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மேற்கொண்டார்.
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் ஜன.31ம் தேதி தொடங்குகிறது. அன்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையாற்றுகிறார். இதனையடுத்து பிப்.1ம் தேதி நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்நிலையில் பட்ஜெட் தயாரிப்பு இறுதி கட்டத்தை எட்டியிருக்கிறது. இதனையடுத்து நாடாளுமன்ற வளாகத்தின் நார்த் பிளாக்கில் அல்வா கிண்டும் நடைமுறையை நிர்மலா சீதாராமன் நேற்று மேற்கொண்டார். பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டிருந்த அனைவருக்கும் அல்வா வழங்கப்பட்டிருந்தது.

கடந்த 1980களிலிருந்து இந்த அல்வா கிண்டும் நடைமுறை பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இது குறித்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டு வந்தன. ஆனால், இந்த ஆண்டு எந்த புகைப்படமும் வெளியாகவில்லை. இந்த நிகழ்ச்சியில் நிதித்துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மற்றும் நிதிச் செயலர் துஹின் காந்தா பாண்டே உள்ளிட்ட மூத்த அதிகாரிகளும் பங்கேற்றிருந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
பொதுவாக பட்ஜெட் தயாரிக்கப்படும்போது அது குறித்த தகவல்கள் வெளியில் கசிந்துவிடாமல் இருக்க தயாரிப்பில் ஈடுபடும் அனைவரும் நார்த் பிளாக்கில் உள்ள பெரிய கட்டிடத்தில் வைத்து லாக் செய்யப்படுவார்கள். அவர்களுக்கு செல்போன் உள்ளிட்டவை கூட அனுமதி கிடையாது. பட்ஜெட் அச்சிடப்பட்டு முடிக்கப்படும்போது, அதில் ஈடுபட்ட அனைவரையும் கவுரவிக்கும் வகையில் இந்த அல்வா தயாரிப்பு நடைமுறை பின்பற்றப்படுகிறது.
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 8வது பட்ஜெட் இதுவாகும். எனவே, பட்ஜெட் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது. பிப்.1ம் தேதி காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. ஜன.31ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடர் இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்டம் பிப்.14ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து மீண்டும் மார்ச்.10ம் தேதி கூட்டத்தொடர் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications