அரசியல் மைண்ட் மாஸ்டர்.. டெல்லி வரை பவர்! பீகாரின் ஸ்ட்ராட்டஜிக் பிளேயர்.. நிதிஷின் அரசியல் பயணம்!
டெல்லி: பீகார் அரசியலைப் பொறுத்தவரை நிதிஷ் குமாரை ஒரு சாதாரண தலைவர் என்றோ, மாநிலத்தின் முதல்வர் என்ற வரயறைக்குள் மட்டும் சுருக்கி விட முடியாது. அவர் எப்போது எந்த முடிவை எடுப்பார் என்பதை யாரும் கணிக்க முடியாது.
கடந்த 2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்னதாக ஆர்ஜேடி - காங்கிரஸ் கூட்டணியை விட்டு பாஜகவுடன் கைகோர்த்த போது எதிரணிகள் நிதிஷின் எதிர்காலம் இனி அவ்வளவு தான் என விமர்சித்தனர். ஆனால் இன்று, பீகார் மட்டுமல்லாது டெல்லி வரை அரசியல் செல்வாக்கை கொண்ட தலைவராக தன்னை மீண்டும் நிரூபித்து காட்டியுள்ளார் நிதிஷ்.
நிதிஷ்குமார் முதன்முதலில் 2000ஆம் ஆண்டில் முதல்வராக பதவியேற்று இருந்தார். பின்னர் 2005ல் பெரும்பான்மை வெற்றியுடன் அதிகாரத்தை பிடித்த அவர், 2010-ல் மூன்றாவது முறையாகவும் முதல்வரானார். இந்த காலங்களில் பாஜக - ஜேடியூ கூட்டணி மிகவும் உறுதியானதாக இருந்தது.'

நிதிஷ்குமார் அரசியல்
2014-ல் நரேந்திர மோடி அலை பீகாரில் ஆதிக்கம் செலுத்திய போது, நிதிஷ் பாஜகவிலிருந்து பிரிந்து, லாலு பிரசாத் யாதவின் ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸுடன் இணைந்தார். 2015 தேர்தலில் இந்த கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதன் மூலம் நிதிஷ் மீண்டும் முதல்வர் பதவியை பெற்றார். ஆனால் 2017-ல் இவர் திடீரென மகாகத்பந்தனை விட்டு வெளியேறி, மீண்டும் பாஜகவின் என்டிஏ கூட்டணியில் சேர்ந்தார். 2020 தேர்தலிலும் அவர் முதல்வராகத் தொடர்ந்தார்.
என்டிஏ வெற்றி
2022ல் மீண்டும் அதே 'யூ-டர்ன்'. என்டிஏ-வை விட்டு வெளியேறி ஆர்ஜேடி-காங்கிரஸுடன் கைகோர்த்து முதல்வரானார். ஜனவரி 2024-ல் அவர் மீண்டும் பாஜகவுடன் சேர்ந்து 9-வது முறையாக முதல்வரானார். இப்போது 2025 தேர்தலில் NDA மிகப்பெரிய வெற்றி பெற்றதால், நிதிஷ் குமார் 10வது முறையாக முதல்வர் பதவியை ஏற்கிறார். இந்த சாதனை இந்திய அரசியலில் மிக அரிதான ஒன்று.
நிதிஷ் அரசியல் பயணம்
இப்படி யூ-டர்ன் அரசியல்வாதி என பெயர் எடுத்தாலும் இந்தியாவிலேயே அதிக காலம் முதல்வராக இருந்தவர்களின் ஒருவராக நிதிஷின் பெயர் பொறிக்கப்பட்டுள்ளது. நிதிஷ் குமாரின் அரசியல் பயணத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள, கர்ப்பூரி தாக்குரின் பெயர் குறிப்பிடப்பட வேண்டும். பீகார் அரசியலில் சமூக நீதி, பிற்படுத்தப்பட்டோருக்கான உரிமை, கல்வி வாய்ப்பு, மதுவிலக்கு போன்ற சிந்தனைகளை முன்னிலைப்படுத்தியவர் கர்ப்பூரி தாக்குர். 1950களில் ஆசிரியராக தொடங்கிய கர்ப்பூரி தாக்குர், பின்னர் இரண்டு முறை பீகார் முதல்வராக இருந்து மக்கள் நல திட்டங்களால் பெரும் புகழை பெற்றவர்ர்.
சோஷலிச சிந்தனையாளர்
நிதிஷ் குமார் கர்ப்பூரி தாக்கூரின் அரசியல் வாரிசாக பார்க்கப்படுகிறார். 2024 தேர்தல் முன் நிதிஷ் அறிவித்த மகளிருக்கான நிதியுதவி திட்டம் கூட கர்ப்பூரி தாக்குருக்கு சமர்ப்பணம் என்று ஜேடியு கொண்டாடியது குறிப்பிடத்தக்கது. 1977-ல் அரசியலில் களம் இறங்கிய நிதிஷ், ராம் மனோகர் லோஹியா, ஜார்ஜ் பெர்னாண்டஸ் போன்ற சோஷலிச சிந்தனையாளர்களால் தீவிரமாக கவரப்பட்டவர். அதனால் தான் இவர் எப்போதும் சாதி - சமுதாய நலன்களைக் குறிவைத்து அரசியல் முடிவுகளை எடுப்பார்.
ஸ்ட்ராட்டஜிக் பிளேயர்
பீகார் அரசியல் எப்போதுமே யாதவ்-முஸ்லிம் வாக்குகளால் (32%) கூட்டணிகளின் வெற்றி தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் மக்கள் தொகையில் வெறும் 3% மட்டுமே உள்ள குர்மி சமூகத்தை சேர்ந்த நிதிஷ் குமார், சாதி சமன்பாடுகளை தாண்டி கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக அரசியலில் தனது ஆளுமையை நிலைநாட்டி வருகிறார். அவரது பிரபலமும், நம்பகத்தன்மையும், எந்த கூட்டணி ஆனாலும் "ஸ்ட்ராட்டஜிக் பிளேயர்" என அழைக்கப்படுகிறார். அதனால் தான் இன்று பீகார் மட்டுமல்ல, தேசிய அரசியலிலும் அவரை முக்கியமான தலைவராக மாற்றியுள்ளது.












Click it and Unblock the Notifications