நிதிஷ் ரெட்டி மீது மோசடி புகார்.. ரூ.5 கோடி கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு.. திடுக் பின்னணி
டெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான நிதிஷ் ரெட்டி தற்போதைய இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக விலகி உள்ளார். இந்நிலையில் தான் தற்போது நிதிஷ் ரெட்டி சட்ட சிக்கலில் சிக்கி உள்ளார். ரூ.5 கோடி நிலுவை தொகையை வழங்கவில்லை என்று அவருக்கு எதிராக டெல்லி நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருபவர் நிதிஷ் ரெட்டி. ஆல்ரவுண்ட்டரான இவர் தற்போது இந்திய கிரிக்கெட் அணிக்காகவும் விளையாடி வருகிறார். 2024-2025 ஆண்டு பார்டர் - கவாஸ்கர் டிராபி டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்காக அறிமுகம் ஆகி சிறப்பாக விளையாடினார்.

அதன்பிறகு சமீபத்தில் நடந்து முடிந்த ஐபிஎல் சீசனில் அவர் ஜொலிக்கவில்லை. அதன்பிறகு தற்போது நடந்து வரும் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான அணியில் நிதிஷ் ரெட்டி இடம்பிடித்தார். பர்மிங்காம் மற்றும் லார்ட்ஸ் டெஸ்ட் போட்டிகளில் விளையாடினார். அவருக்கு முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் டெஸ்ட் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
இந்நிலையில் தான் நிதிஷ் ரெட்டி தற்போது சட்ட சிக்கலில் சிக்கி உள்ளார். அதாவது நிதிஷ் ரெட்டி கடந்த 2021ம் ஆண்டு முதல் ‛ஸ்கொயர் தி ஒன்' என்ற நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வந்தார். இந்த நிறுவனம் விளையாட்டு வீரர்களுக்கான ஸ்பான்ஷர்ஷிப் உள்பட பல்வேறு வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் கடந்த 4 ஆண்டுகளுக்கும் நிதிஷ் ரெட்டி இருந்தார். இந்த காலக்கட்டத்தில் நிதிஷ் ரெட்டி பல பிராண்ட்டுகளுடன் வணிக ரீதியிலான ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆனால் பார்டர் - கவாஸ்கர் டிராபியின்போது நிதிஷ் ரெட்டி அந்த நிறுவனத்தை விட்டு வெளியே வந்துள்ளார். அதுமட்டுமின்றி அவர் இன்னொரு கிரிக்கெட் வீரரின் மேலாளருடன் சேர்ந்து ஒப்பந்தம் மேற்கொண்டார். இந்நிலையில் தான் ‛ஸ்கொயர் தி ஒன்' என்ற நிறுவனம் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிதிஷ் ரெட்டிக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதில், ‛‛நிதிஷ் ரெட்டி தங்களது நிறுவனத்தின் நிர்வாக ஒப்பந்தத்தை மீறிவிட்டார். நிலுவை தொகையை செலுத்தாமல் உள்ளார்' என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும் நடுவர் மற்றும் சமரச சட்டப்பிரிவு 11(6)ன் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் நிலுவை தொகை ரூ.5 கோடி அவரிடம் கேட்கப்பட்டுள்ளது. அதோடு வழக்கை விசாரிக்க தனி நடுவரை நியமிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நாளை (ஜூலை 28) டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இதுபற்றி பெயர் வெளியிட விரும்பாத ஒருவர் கூறுகையில், ‛‛வீரர்களுக்கும், இதுபோன்ற நிறுவனங்களுக்கும் இடையே இப்படியான பிரச்சனைகள் அடிக்கடி வருவது உண்டு. ஆனால் இதில் 90 சதவீத பிரச்சனைகள் நீதிமன்றத்துக்கு செல்வது இல்லை. தனிப்பட்ட முறையில் அவர்களே பேசி தீர்த்து கொள்கின்றனர். ஆனால் தற்போது நிதிஷ் ரெட்டி எந்த பணத்தையும் செலுத்த மறுத்துள்ளதோடு, ஒப்பந்தங்களை தானே பெற்றதாக தெரிவித்துள்ளார். இதனால் தான் இந்த விவகாரம் நீதிமன்றம் படியேறி உள்ளது'' என்றார்.
****












Click it and Unblock the Notifications