இன்சூரன்ஸ் கட்டாயம்.. இல்லைனா பெட்ரோல், டீசல் கூட வாங்க முடியாது! விதிகளை மாற்றும் மத்திய அரசு?
டெல்லி: நமது நாட்டில் ஏற்கனவே மூன்றாம் நபர் காப்பீடு எனப்படும் third-party insurance கட்டாயமாக இருக்கிறது. இருப்பினும், சுமார் 50% வாகனங்களுக்கு நமது நாட்டில் உரியக் காப்பீடுகள் இருப்பதில்லை. இதற்கிடையே முறையான இன்சூரன்ஸ் இருந்தால் மட்டுமே பெட்ரோல்- டீசலை பெற முடியும். மேலும், பாஸ்ட் சேவைக்கும் காப்பீடுகளைக் கட்டாயமாக்கும் வகையில் புதிய விதிகளைக் கொண்டு வர மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
எந்தவொரு நாடாக இருந்தாலும் அதற்குச் சாலை உள்கட்டமைப்புகள் ரொம்பவே முக்கியம். என்ன தான் விமானம், ரயில்கள் இருந்தாலும் சாலைகள் தான் தொலைதூர கிராமங்களையும் இணைக்கிறது.

இன்சூரன்ஸ்:
இதனால் தனிநபர் தாண்டி பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் வாகனங்களுக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. இந்தியாவில் ஏற்கனவே வாகனங்களுக்கு மூன்றாம் நபர் காப்பீடு, அதாவது third-party insurance என்பது கட்டாயமான ஒன்றாகவே இருக்கிறது. மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இதில் கடுமையான தண்டனைகள் ஏற்கனவே இருக்கும் போதிலும் பலரும் third-party insuranceகளை எடுப்பதில்லை. இது தேவையில்லாத பிரச்சினைகளை உருவாக்குகிறது.
இதனால் இன்சூரன்ஸ் தொடர்பான விதிகளை விரிவுபடுத்தும் நடவடிக்கைகளைப் பரிசீலிக்குமாறு சாலை போக்குவரத்துத் துறை அமைச்சகத்தை மத்திய நிதி அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. காப்பீடு செய்யப்படாத வாகன உரிமையாளர்களுக்கு அது தொடர்பான ரிமைண்டர் மெசேஜை அனுப்புவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி பெட்ரோல்- டீசல் வாங்கவும், ஃபாஸ்ட் டேக் ரீசார்ஜ்களுக்கும் கூட ஓட்டுநர் உரிமம் மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுச் சான்றிதழ் உடன் இன்சூரன்ஸை கட்டாயமாக்க மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது.
ரூல்ஸ் என்ன:
நமது நாட்டின் மோட்டார் வாகனச் சட்டம், 1988இன் கீழ், அனைத்து மோட்டார் வாகனங்களும் மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் கட்டாயமாகும். இல்லையென்றால் அபராதம் மற்றும் 3 மாதம் சிறைத் தண்டனை கூட கிடைக்கும். எதிர்பாராத நேரங்களில் விபத்து ஏற்பட்டால் வாகனத்திற்கு ஏற்படும் செலவு அதிகமாக இருக்கும். இது தேவையற்ற மோதல்களுக்கு வழிவகை செய்கிறது. இதன் காரணமாக இழப்புகளைச் சமாளிக்க மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
50% இன்சூரன்ஸ் இல்லை
கடந்த 2024ம் ஆண்டின் டேட்டாவின்படி நாடு முழுக்க 40 கோடி வாகனங்கள் உள்ளன. இருப்பினும், அதில் 50% வாகனங்களுக்கு மட்டுமே இன்சூரன்ஸ் இருக்கிறது. இந்தச் சூழலில் தான் சமீபத்தில் நாடாளுமன்ற நிலைக்குழு, மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸை கட்டாயமாக்கும் வழிகள் குறித்து மத்திய அரசு பரிசீலனை செய்ய வேண்டும் எனப் பரிந்துரைத்தது. கடந்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அதன் ஏழாவது அறிக்கையில், "நாட்டில் ஓடும் 56% வாகனங்கள் காப்பீடு செய்யப்படாதவையாக உள்ளன.
எனவே, டேட்டாவை ஒருங்கிணைத்து எலக்டிரானிக் சலான்களை முறைப்படுத்துவது குறித்தும் வழிகளைக் கண்டறிய வேண்டும். வாகனப் பதிவுகள் மற்றும் காப்பீடு கவரேஜ் பற்றிய தகவல்களை மாநிலங்கள் முறையாகத் தெரிவிக்க வேண்டும். இதன் மூலம் காப்பீடுஎடுக்காத வாகனங்கள் மீது தேவையான நடவடிக்கைகளை எடுக்க முடியும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
ஏன் முக்கியம்:
இது தொடர்பாக வல்லுநர்கள் கூறுகையில், "ஃபாஸ்டேக், மூன்றாம் தரப்பு இன்சூரன்ஸ், போக்குவரத்து விதிமீறல்கள் மற்றும் மாசு சான்றிதழ்களுடன் ஆதாரை ஒருங்கிணைப்பது குறித்து பரிசீலனை அளிக்கப்பட்டுள்ளது. இது அமைப்பின் செயல்திறனைப் பெரிதும் மேம்படுத்தும். ஒவ்வொரு சேவைக்கும் ஒவ்வொரு இணையதளத்திற்குப் போகத் தேவையில்லை. ஒரே இடத்தில் அனைத்தையும் பார்த்துக் கொள்ளலாம். ஐரோப்பாவில் பல நாடுகளில் இதுபோன்ற வசதி உள்ளது" என்றார்.
இதுபோல அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைப்பதன் மூலம் அனைத்து வாகனங்களுக்கும் இன்சூரன்ஸ் எடுப்பதைக் கட்டாயமாக்க முடியும். இது நமக்குச் செலவு போலத் தெரிந்தாலும் உண்மையில் விபத்து ஏற்படும் போது நமக்கு மிகப் பெரிய உதவியாகவே இருக்கும்.












Click it and Unblock the Notifications