கால்வன் பள்ளத்தாக்கு மோதல்- புலனாய்வுத் துறை தோல்வி இல்லை: அனைத்து கட்சி கூட்டத்தில் ராஜ்நாத்சிங்
டெல்லி: லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கு மோதல் விவகாரத்தில் புலனாய்வுத்துறை தோல்வி அடைந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக் மறுத்துள்ளார்.
கால்வன் பள்ளத்தாக்கு மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். தேசத்தை பேரதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது சீனாவின் இந்த தாக்குதல்.
இந்தியாவுக்குள் சீனா ஊடுருவவில்லை- ஒரு அங்குலம் நிலத்தையும் எடுக்க விடமாட்டோம்: பிரதமர் மோடி
மோடியின் அனைத்து கட்சி கூட்டம்
இது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் பங்கேற்றனர். காங்கிரஸ் தலைவர் சோனியா, மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், இடதுசாரி தலைவர்கள் ராஜா, யெச்சூரி, தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சோனியா சரமாரி கேள்வி
இதில் பேசிய காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, புலனாய்வுத்துறை தோல்வி அடைந்துவிட்டதா? என சரமாரி கேள்வி எழுப்பினார். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவுக்குள் சீனா ஊடுருவவும் இல்லை- எந்த நிலையையும் கைப்பற்றவும் இல்லை எனவும் விளக்கம் அளித்தார்.
ராஜ்நாத்சிங் திட்டவட்டம்
இக்கூட்டத்தில் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், கால்வன் பள்ளத்தாக்கு மோதல் விவகாரத்தில் புலனாய்வுத் துறைக்கு தோல்வி இல்லை. இதில் புலனாய்வுத் துறை சரியாகவே செயல்பட்டது என விளக்கம் அளித்திருக்கிறார் என கூறப்படுகிறது.
காஷ்மீர்- ராணுவம் விளக்கம்
இதனிடையே எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் ப்பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது. இந்த தாக்குதல்களுக்கும் சீனாவுடனான எல்லை மோதல்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று ராணுவம் திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்திருக்கிறது.