இனி Gpay, Phonepeஇல் பணம் அனுப்ப கூடுதல் கட்டணம்? ரிசர்வ் வங்கி கவர்னர் சொன்ன வார்த்தை முக்கியம்
டெல்லி: நமது நாட்டில் இப்போது பெரும்பாலான மக்கள் யுபிஐ சேவைகளைப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். இதனால் யுபிஐ மூலம் பணம் அனுப்பும் போக்கும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கவுள்ளதாக இணையத்தில் தகவல் பரவியது. இதற்கிடையே ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இது தொடர்பாக முக்கிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.
நமது நாட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே நாம் பணத்தைச் செலவு செய்யும் முறை மொத்தமாக மாறியுள்ளது. அதற்கு முன்பு வரை ரொக்கத்தை எடுத்துக் கொண்டு போய் தான் பணத்தைச் செலவு செய்வோம். இருப்பினும் திருட்டு பயம், சில்லறை பிரச்சினை என 1008 சிக்கல்கள் இருக்கும். ஆனால், யுபிஐ வந்த பிறகு நிலைமை மொத்தமாக மாறிவிட்டது.

யுபிஐ
செல்போன் இருந்தாலே போதும் நேரடியாகப் பணத்தை அனுப்பிவிடலாம் என்பதால் மக்கள் இதை அதிகம் பயன்படுத்த ஆரம்பித்தனர். குறிப்பாக யுபிஐ மூலம் பணம் அனுப்பும்போது பணத்தை அனுப்புவோர், பெறுவோர் என இரு தரப்பிற்குமே கூடுதல் கட்டணம் எதுவும் இல்லை. யுபிஐ சேவை மிகப் பெரியளவில் ஹிட் அடிக்க அதுவே காரணம். இப்போது இந்தியாவில் கார்டுகளை விட யுபிஐ மூலம் தான் அதிகளவில் பணம் அனுப்பப்படுகிறது
இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு, யுபிஐ பரிவர்த்தனைகள் எப்போதுமே இலவசமாக இருக்காது என்பது போல ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா கூறியிருந்தார். அவரது இந்தப் பேச்சு அப்போது பேசுபொருளானது. சீக்கிரமே யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதையே இது காட்டுவதாக பலரும் விமர்சித்தனர்.
கூடுதல் கட்டணம்?
இதற்கிடையே இது தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கமளித்துள்ளார். அதாவது யுபிஐ பரிவர்த்தனைகளுக்கு எந்தக் கட்டணமும் விதிக்கப்படாது என அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார். யுபிஐ பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், அதற்குக் கட்டணம் விதிக்கப்படும் என்ற கேள்விக்கு ஆளுநர் மல்ஹோத்ரா, "யுபிஐக்கு கட்டணம் விதிக்கப்படுமா எனக் கேட்கிறீர்கள். அதுபோல எந்தவொரு திட்டமும் எங்களிடம் இல்லை" என்றார்.
குறைக்கப்படுமா?
இந்தச் செய்தியாளர் சந்திப்பில், ஆர்பிஐ ஆளுநர் மல்ஹோத்ராவும் மற்ற துணை நிலை ஆளுநர்களும், வரும் காலத்தில் வட்டி விகிதம் மேலும் குறைக்கப்பட வாய்ப்பு இருக்கிறதா என்ற கேள்விக்கும் பதிலளித்தனர். அதாவது பணவீக்கம் கணிசமாகக் குறைந்துள்ளதால், பணவியல் கொள்கையைத் தளர்த்தவும் முடியும் என ஆளுநர் தெரிவித்தார். அதாவது பணவீக்கம் தொடர்ந்து கட்டுக்குள் இருந்தால் வட்டி விகிதம் குறைக்கப்படும் என்பதே அவரது பதிலாகும்.
ரிசர்வ் வங்கி ஆளுநர்
கடந்த சில மாதங்களுக்கு முன்பு யுபிஐ குறித்த கேள்விக்கு ஆர்பிஐ கவர்னர் சஞ்சய், "இப்போது யுபிஐ சேவையில் எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை. ஆனால், இந்த பேமெண்ட் கட்டமைப்பைப் பராமரிக்கக் குறிப்பிட்ட செலவாகிறது. இந்தச் செலவை இப்போது அரசு தான் வங்கிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கும் வழங்கி வருகிறது. ஆனால், எந்தவொரு சர்வீஸும் நிலையானதாக இருக்க வேண்டுமென்றால், அதற்குக் கட்டணத்தைச் செலுத்தியாக வேண்டும். அது யூசராக இருக்க வேண்டும் அல்லது வேறு யாராக இருக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
அவரது இந்தப் பேச்சை வைத்தே இலவச யுபிஐ முடிந்துவிட்டது.. இனி கட்டணம் செலுத்த வேண்டும் என்று சொல்லி இணையத்தில் தகவல் பரவியது. அதைத்தான் இப்போது ஆர்பிஐ ஆளுநர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். யுபிஐ பரிவர்த்தனைகளுக்குக் கட்டணம் வசூலிக்கும் திட்டம் எதுவும் இல்லை என அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications