டோட்டல் ஃபெயிலியர்.. பீகாரில் ராகுல் காந்தி யாத்திரை போன ரூட் எல்லாம் காங்கிரஸ் அவுட்!
டெல்லி: பீகார் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி யாத்திரை நடத்திய தொகுதிகள் அனைத்திலும் காங்கிரஸ் கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளது. ராகுல் பயணம் செய்த ஒரு தொகுதியில் கூட காங்கிரஸ் கட்சி வெற்றி பெறவில்லை.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வாக்குத் திருட்டு விவகாரத்தைக் கையிலெடுத்து, பீகாரில் வாக்காளர் அதிகார பயணம் மேற்கொண்ட பகுதிகளில் உள்ள தொகுதிகளில் காங்கிரஸ் பின்னடைவைச் சந்தித்திருப்பது இன்றைய தேர்தல் முடிவுகளின் மூலம் தெரியவந்துள்ளது.

பீகார் சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், வாக்கு எண்ணிக்கையின் தொடக்கம் முதலே தேசிய ஜனநாயக கூட்டணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுடன் தேர்தலை சந்தித்த ஆர்ஜேடி - காங்கிரஸ் கட்சியின் மகாகட்பந்தன் கூட்டணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
பீகார் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், இன்று மாலை 5 மணி நிலவரப்படி என்டிஏ கூட்டணி 204 இடங்களில் முன்னிலையில் உள்ளது. மகாகத்பந்தன் கூட்டணி 34 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக, 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே தற்போது முன்னிலையில் உள்ளது.
பல்வேறு மாநிலங்களிலும் மத்தியில் ஆளும் பாஜகவுடன் தேர்தல் ஆணையம் இணைந்து வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சி எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டி வந்தார். அந்தவகையில் பீகார் மாநிலத்தில் ராகுல் காந்தி, வாக்காளர் அதிகார யாத்திரையை மேற்கொண்டிருந்தார். அதாவது பீகாரின் சசராமில் தொடங்கி 25 மாவட்டங்கள், 110 சட்டசபை தொகுதிகள் வழியாக 1300 கி.மீ தூரம் பயணித்து பாட்னாவில் நிறைவு செய்தார்.
ராகுல் காந்தி பயணித்த இந்த தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட, காங்கிரஸ் கட்சி முன்னிலை வகிக்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 61 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கிஷண்கஞ்ச், மணிஹாரி, பெகுசராய், வால்மீகி நகர் உள்ளிட்ட 5 தொகுதிகளில் மட்டுமே 5 மணி நிலவரப்படி முன்னிலை வகித்து வருகிறது.
2024 மக்களவைத் தேர்தல்களிலும் 2023 தெலுங்கானா தேர்தல்களிலும் ராகுல் காந்தியின் யாத்திரைகள் சிறப்பான வெற்றியைப் பெற உதவியதாக காங்கிரஸ் கட்சி நம்பியது. 2022 மற்றும் 2024 க்கு இடையில் காந்தி மேற்கொண்ட 2 அகில இந்திய பாரத் ஜோடோ யாத்திரைகளைத் தொடர்ந்து காங்கிரஸ் 41 இடங்களை வெல்ல முடிந்தது. தெலுங்கானாவில், காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
ஆனால் தற்போது பீகாரில் ராகுல் காந்தி மேஜிக் வொர்க் அவுட் ஆகவில்லை. பாஜக மற்றும் தேர்தல் ஆணையத்தின் மீது ராகுல் காந்தி சுமத்திய "வாக்கு திருட்டு" குற்றச்சாட்டு வாக்காளர்கள் மத்தியில் எடுபடவில்லை என்பதை பீகார் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.












Click it and Unblock the Notifications