"திமிர் கூடாது.." மோகன் பகவத் பேச்சுக்கு என்ன அர்த்தம்! பாஜக உடன் மோதலா? ஆர்எஸ்எஸ் திடீர் விளக்கம்
டெல்லி: ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் பாஜகவுக்கும் இடையே மோதல் நிலவுவதாகக் கடந்த சில நாட்களாகத் தகவல்கள் பரவிய நிலையில், இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் அமைப்பு முக்கிய விளக்கத்தைக் கொடுத்துள்ளது.
கடந்த சில நாட்களாகவே ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கும் பாஜகவுக்கும் இடையே மோதல் நிலவி வருவதாகத் தகவல்கள் வெளியானது. அதற்கேற்ப ஆர்எஸ்எஸ் தலைவர்கள் கூறிய சில கருத்துகளும் விவாதத்தைக் கிளப்பி இருந்தது.

மோகன் பகவத்: கடந்த சில நாட்களுக்கு முன்பு நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையிடத்தில் நடந்த விழாவில் பேசிய மோகன் பகவத், "ஒரு உண்மையான சேவகர் கண்ணியமுடன் இருக்க வேண்டும்.. ஒரு பதவியில் இருந்தால் அதற்கான மரியாதையைத் தர வேண்டும்.. இந்த வேலையை நான் தான் செய்தேன் என்று சொல்லும் திமிர் இருக்கவே கூடாது.. அப்படிப்பட்ட திமிர் இல்லாத ஒரு நபரை மட்டுமே உண்மையான சேவகன் என்று அழைக்க முடியும்" என்று அவர் கூறியிருந்தார்.
இது தேசியளவில் பேசுபொருள் ஆனது. பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் இடையே ஏற்பட்ட மோதலுக்கு இதுவே சாட்சி என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சிக்கத் தொடங்கினர். இதற்கிடையே இரு தரப்பிற்கும் இடையே மோதல் எதுவும் இல்லை என்று ஆர்எஸ்எஸ் தரப்பு மறுத்துள்ளது.
விளக்கம்: பாஜக ஆர்எஸ்எஸ் இடையே பிளவு இல்லை என்றும் மோகன் பகவத்தின் பேச்சு வேறு விதமாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக ஆர்எஸ்எஸ் வட்டாரங்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக ஆர்எஸ்எஸ் வட்டாரங்கள் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "2014 மற்றும் 2019 லோக்சபா தேர்தலுக்கு பிறகும் மோகன் பகவத் இதேபோல உரையாற்றி இருந்தார். எனவே, இது தான் முதல்முறை எனச் சொல்வதே தவறு.அந்த பேச்சுக்கும் இந்த பேச்சுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. லோக்சபா தேர்தல் போல தேசியளவில் முக்கியமான நிகழ்வுகளின் போது ஆர்எஸ்எஸ் தலைவரின் உரை இருக்கவே செய்யும்.
இந்த முறையும் அதுவே தான் நடந்தது.. ஆனால் இந்த முறை அது தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது.. சிலர் திட்டமிட்டுக் குழப்பத்தை ஏற்படுத்த முயல்கிறார்கள்.. திமிர் குறித்து அவர் பேசியது எந்த விதத்திலும் பிரதமர் நரேந்திர மோடியை அல்லது எந்த பாஜக தலைவரையும் குறிப்பிடும் வகையில் இல்லை என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம்" என்றார்.
சொந்த கருத்து: அதேபோல ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் குமாரும் பாஜக தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெறாமல் போனது குறித்துப் பேசியிருந்தார். இது குறித்துக் கேட்ட போது அது அவரது தனிப்பட்ட கருத்து என்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் அதிகாரப்பூர்வ நிலைப்பாட்டை அது பிரதிபலிக்கவில்லை என்றும் மட்டும் கூறியுள்ளனர்.
இந்திரேஷ் குமார்: சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய இந்திரேஷ் குமார், "ராமரின் பக்தி குறித்துப் பேசும் கட்சி (பாஜக) திமிர் பிடித்த ஒன்றாக மாறி இருந்தது. இதனால் இது 241 சீட்களில் நிறுத்தப்பட்டது.. இருப்பினும், அது தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ராமர் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் சேர்ந்த போதிலும் அவர்களால் 234 சீட்களை மட்டுமே வெல்ல முடிந்துள்ளது" என்று லோக்சபா தேர்தல் முடிவுகள் குறிப்பிட்டு பேசினார்.
இப்படி முதலில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், அடுத்து ஆர்எஸ்எஸ் தேசிய செயற்குழு உறுப்பினர் இந்திரேஷ் என வரிசையாகப் பலரும் பாஜகவைச் சாடும் வகையில் பேசியதே விவாதத்தைக் கிளப்பியது. இந்தச் சூழலில் தான் ஆர்எஸ்எஸ் தரப்பு இது தொடர்பாக விளக்கத்தை இப்போது கொடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications