ஓய்வு பெற இருப்பவர்களுக்கு மரியாதை இல்லை... நாளையுடன் ஓய்வு பெறும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா
டெல்லி: நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்றும் என்.வி.ரமணா, நாளையுடன் பணி ஓய்வு பெறுகிறார். உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நாளை மறுநாள் யு.யு.லலித் பொறுப்பேற்கிறார். முன்னதாக நேற்று உச்சநீதிமன்றத்தில் இலவசங்கள் தொடர்பான வழக்கில், ஓய்வு பெற இருப்பவர்களுக்கு இங்கு மரியாதை இல்லை என கூறியிருந்தார் என்.வி.ரமணா.
ஆந்திராவை சேர்ந்தவர் தலைமை நீதிபதி என்.வி.ரமணா. பத்திரிகையாளராக பணியாற்றத் தொடங்கி பின்னர் நீதித்துறையில் கால் பதித்தார். 2014-ம் ஆண்டு முதல் உச்சநீதிமன்ற நீதிபதியாக பணிபுரிந்து வருகிறார்.
உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக கடந்த ஆண்டு ஏப்ரல் 24-ந் தேதி நியமிக்கப்பட்டார் என்.வி.ரமணா. அவரது பணிக் காலம் நாளை ஆகஸ்ட் 26-ந் தேதியுடன் நிறைவடைகிறது.
நாட்டின் மரபுகளின் படி புதிய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை, ஓய்வு பெறும் தலைமை நீதிபதி என்.வி.ரமணா மத்திய அரசுக்கு பரிந்துரைத்தார். உச்சநீதிமன்ற நீதிபதிகளில் சீனியரான யு.யு.லலித்தை புதிய தலைமை நீதிபதியாக பரிந்துரைத்திருந்தார் என்.வி.ரமணா.
இதனை மத்திய அரசும் ஏற்றுக் கொண்டது. இதனையடுத்து ஆகஸ்ட் 27-ந் தேதி உச்சநீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக யு.யு. லலித் பொறுப்பேற்கிறார். அவருக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பொறுப்பேற்க உள்ள யு.யு.லலித் பணி காலம் நவம்பர் 8-ந் தேதியுடன் நிறைவடைகிறது.
இலவசங்கள் தொடர்பாக மத்திய அரசு அனைத்து கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டக் கூடாது? : உச்சநீதிமன்றம்
முன்னதாக உச்சநீதிமன்றத்தில் இலவசங்கள் தொடர்பான வழக்கு விசாரணை நேற்று நடைபெற்றது. இலவசங்களை அறிவிக்கும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக பாஜகவின் அஸ்வினி உபாத்யாய் தொடர்ந்த இந்த வழக்கில் காரசார விவாதங்கள் நடந்தன. அப்போது, இலவசங்கள் தொடர்பாக ஆராய ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி லோதா தலைமையில் ஒரு குழு அமைக்கலாம் என மனுதாரர் தரப்பில் கருத்து முன்வைக்கப்பட்டது.
இலவசங்கள் தொடர்பாக மத்திய அரசு அனைத்து கட்சிக் கூட்டத்தை ஏன் கூட்டக் கூடாது? : உச்சநீதிமன்றம்
இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி என்.வி.ரமணா, பணியில் இருந்து ஓய்வு பெறுபவர் அல்லது ஓய்வு பெற இருப்பவருக்கு இங்கே மரியாதை இல்லை எனக் குறிப்பிட்டார். உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பணியில் இருந்து நாளையுடன் ஓய்வு பெறும் நிலையில் என்.வி.ரமணா இக்கருத்தை தெரிவித்திருப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.