"நாடாளுமன்றத்தில் எந்தவொரு வார்த்தைக்கும் தடை இல்லை, ஆனால்.." மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கம்
டெல்லி: நாடாளுமன்றத்தில் பேசத் தடை விதிக்கப்பட்டுள்ள வார்த்தைகள் என்ற பட்டியல் வெளியாகிப் பரபரப்பைக் கிளப்பி உள்ள நிலையில், இது குறித்து சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கம் அளித்துள்ளார்.
இந்திய நாடாளுமன்றம் மக்களவை, மாநிலங்களவை என இரண்டாகப் பிரிக்கப்பட்டு உள்ளது. மக்களவை உறுப்பினர்கள் நேரடியாகவும் மாநிலங்களவை உறுப்பினர்கள் எம்எல்ஏக்கள் மூலமும் தேர்வு செய்யப்படுவார்கள்.
இரு அவைகளிலும் மக்கள் பிரச்சனைகள், புதிய மசோதா, குறித்து எம்பிக்கள் விவாதங்கள் நடத்துவார்கள். இது தான் இந்திய நாடாளுமன்றம் செயல்படும் முறை.

நாடாளுமன்ற மரபு
அதேபோல நாடாளுமன்றத்தில் ஒரு விவாதம் நடக்கும் போது, நாடாளுமன்ற மரபுப்படி தான் எம்பிக்கள் பேச வேண்டும். எல்லை மீறி விமர்சிக்கும் வகையிலான வார்த்தைகளைப் பயன்படுத்தக் கூடாது. கண்ணியமான வார்த்தைகளே பயன்படுத்த வேண்டும். கண்ணியம் குறைவான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டால் அவை அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும். இந்த முறை தான் இத்தனை காலம் பின்பற்றப்படுகிறது.

வார்த்தைகள்
வரும் ஜூலை 18ஆம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொங்கும் நிலையில், மக்களவை, மாநிலங்களவையில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகள் (unparliamentary words) பட்டியலை லோக்சபா செயலகம் வெளியிட்டுள்ளது. ஆங்கிலம், இந்தி மொழியில் உள்ள வார்த்தைகள் இதில் இடம்பெற்றுள்ளது.

பட்டியல்
வெட்கக்கேடு, துஷ்பிரயோகம், துரோகம், ஊழல், அராஜகம், சர்வாதிகாரம், சகுனி, ரத்தகளரி, கொரோனா பரப்புவர், துரோகம் செய்தார், நாடகம், கபடநாடகம், திறமையற்றவர், அராஜகம் செய்பவர், மோசக்காரர், லாலிபாப், பாப்கட், ஒட்டுக்கேட்பு, வாய் ஜாலம் காட்டுபவர், அழிவு சக்தி, இரட்டை வேடம், பயனற்றது, கொடூரமானவர், ஏமாற்றினார், முதலை கண்ணீர் போன்ற வாதைகளைப் பேசக் கூடாது என்று அறிவிக்கப்பட்டு உள்ளதாக தகவல் பரவியது

சபாநாயகர் விளக்கம்
இன்று காலை இந்த பட்டியல் வெளியான நிலையில், இதை எதிர்க்கட்சிகள் கடுமையாகச் சாடியது. காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இதைக் கடுமையாகச் சாடி இருந்தது. இந்நிலையில், இது குறித்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "இது 1959ஆம் ஆண்டிலிருந்து தொடரும் ஒரு வழக்கமான நடைமுறை தான்.

ஆனால் அவைகுறிப்பில் இருந்து நீக்கப்படும்
நாடாளுமன்றத்தில் எந்தவொரு வார்த்தையும் தடை செய்யப்படவில்லை. உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களைக் கூற சுதந்திரம் உள்ளது. எம்பிகள் தங்கள் கருத்துகளைக் கூறும் உரிமையை யாராலும் பறிக்க முடியாது. ஆனால் எம்பிகளின் கருத்துகள் நாடாளுமன்றத்தின் ஒழுங்கு முறைப்படி இருக்க வேண்டும் முன்பு, இது போன்ற நாடாளுமன்ற வார்த்தை கட்டுப்பாடுகள் (unparliamentary words) புத்தகம் வெளியிடப்பட்டது.

கடந்த காலங்கள்
ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் 1,100 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தை எதிர்க்கட்சியினர் படித்துள்ளனரா? அவர்கள் படித்து இருந்தால் இன்று தவறான கருத்தைப் பரப்பியிருக்க மாட்டார்கள். இதற்கு முன்னரும் 1954, 1986, 1992, 1999, 2004, 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் இதுபோன்ற பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. மேலும் 2010 முதல் ஆண்டுதோறும் இந்த பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.

தடை இல்லை
காகித பயன்பாட்டைக் குறைக்கவே இந்த ஆண்டு இந்தப் பட்டியலை இணையத்தில் வெளியிட்டோம். எந்த வார்த்தையும் தடை செய்யப்படவில்லை, நீக்கப்பட்ட சொற்களின் தொகுப்பை மட்டுமே நாங்கள் வெளியிட்டுள்ளோம். சில நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆட்சேபனையைக் கருத்தில் கொண்டே சில வார்த்தைகளை நீக்க முடிவு எடுக்கப்பட்டது.

நீக்கப்படும்
நீக்கப்பட்ட வார்த்தைகளை எதிர்க்கட்சிகள் மற்றும் ஆளும் கட்சி எம்பிகள் நாடாளுமன்றத்தில் பயன்படுத்துகின்றனர். அவை அனைத்துமே நாடாளுமன்ற அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும். எதிர்க்கட்சிகள் பயன்படுத்தினால், மட்டுமில்லை ஆளும்கட்சி எம்பிகள் பயன்படுத்தினாலும் நீக்கப்படும்" என்று அவர் விளக்கம் அளித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications