எடப்பாடி கடிதம் மீது நடவடிக்கை இல்லை? அதிமுக எம்பியாகவே தொடரும் ஓ.பி. ரவீந்திரநாத்! என்ன காரணம்?
டெல்லி: ஓபிஎஸ் மகன் ஓ.பி. ரவீந்திரநாத்தை அதிமுக எம்பியாக கருதக் கூடாது என அக்கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு கடிதம் எழுதிய நிலையில் அதுகுறித்து அவர் எந்த முடிவையும் எடுக்காததால் ஓபி ரவீந்திரநாத் அதிமுக எம்பியாகவே தொடர்கிறார்.
அதிமுகவில் இரட்டை தலைமைகளாக ஓ பன்னீர் செல்வம், எடப்பாடி பழனிச்சாமி இருந்து வந்த நிலையில் ஒற்றை தலைமை குறித்த கோரிக்கை எழுந்தது. இதற்கு ஓபிஎஸ் எதிர்ப்பு தெரிவித்தார்.
இதையடுத்து அதிமுகவில் 98 சதவீத நிர்வாகிகளின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமி இருந்ததால் கடந்த 11 ஆம்தேதி நடந்த பொதுக் குழு கூட்டத்தில் அவர் இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.

தேர்தல்
மேலும் ஏற்கெனவே தேர்தல் நடத்தப்பட்டு புதிதாக உருவாக்கப்பட்ட ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர்கள் உள்ளிட்ட பதவிகள் செல்லாது என்ற தீர்மானமும் அதிமுக பொதுக் குழுவில் ஏற்படுத்தப்பட்டது. திமுகவுடன் சேர்ந்து கொண்டு அதிமுகவை ஓபிஎஸ்ஸும் அவரது ஆதரவாளர்களும் அழிக்க முயற்சிப்பதாக குற்றம்சாட்டப்பட்டது.

ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்
இதையடுத்து ஓபிஎஸ், அவரது மகன் ஓபி ரவீந்திரநாத், ஜேசிடி பிரபாகரன், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் உள்ளிட்டோரை அதிமுகவிலிருந்து இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக நீக்கினார். இதையடுத்து என்னை நீக்க இவர்கள் யார் என கேட்டு ஓபிஎஸ்ஸும், எடப்பாடி பழனிச்சாமி, கே பி முனுசாமி, சிவி சண்முகம் உள்ளிட்டோரை அதிமுகவிலிருந்து நீக்கப்படுதாக அறிவித்தார்.

தேனி எம்பி
இந்த நிலையில் ஓபிஎஸ் மகனும் தேனி எம்பியுமான ஓ.பி. ரவீந்திரநாத்தை அதிமுக எம்பியாக கருதக் கூடாது என மக்களவை சபாநாயகருக்கு எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியிருந்தார். அது போல் அதிமுக உள்கட்சி பிரச்சினை குறித்து தேர்தல் ஆணையத்தில் வழக்கு இருப்பதால் எடப்பாடி பழனிச்சாமியின் கடிதத்தின் மீது எந்த நடவடிக்கை எடுக்கக் கூடாது, அந்த கடிதத்தை நிராகரிக்க வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு பதில் கடிதத்தை ஓபி ரவீந்திரநாத் எழுதியிருந்தார்.

எடப்பாடி பழனிச்சாமி கடிதம்
எடப்பாடி பழனிச்சாமியின் கடிதம் கொடுத்து சில நாட்களாகியும் அந்த கடிதத்தின் மீது மக்களவை சபாநாயகர் இதுவரை எந்த நடவடிக்கையையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது. மக்களவை இணையதளத்தில் அஇஅதிமுக என்ற லிங்கை கிளிக் செய்தால் அதில் தேனி எம்பி ரவீந்திரநாத்தின் பெயரும் புகைப்படமும் வருகிறது.
Recommended Video

அதிமுக எம்பியாகவே தொடரும் ஓபிஎஸ் மகன்
மேலும் சில மக்களவை ஆவணங்களிலும் அவர் அதிமுக எம்பியாகவே தொடர்கிறார். நாடாளுமன்றத்தில் மழைக்கால கூட்டத் தொடர் நடைபெறுகிறது. இந்த கூட்டத் தொடரிலும் அவர் அதிமுக எம்பியாகவே தொடர்கிறார். எனவே இந்த விவகாரத்தில் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா இரு தரப்பினரையும் அழைத்து விசாரித்து பின்னர் முடிவு எடுக்க வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications