23 நொடியில் பறிபோன 294 உயிர்.. ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு.. என்ன காரணம்?
டெல்லி: ஒடிசாவில் நடந்த பயங்கர ரயில் விபத்தில் 294 பேர் வரை பலியாகி உள்ள நிலையில் அதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை அவசர வழக்காக விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட உள்ள நிலையில் தான் மனுவில் உள்ள முக்கிய சாராம்சங்கள் மற்றும் பின்னணி விபரங்கள் வெளியாகி உள்ளன.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா அருகே ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு கோரமண்டல் விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம்போல் இந்த ரயில் நேற்று முன்தினம் ஷாலிமாரில் இருந்து சென்னைக்கு புறப்பட்டது.
இந்த ரயில் ஒடிசா மாநிலம் பாலாசூர் மாவட்டத்தில் தடம்புரண்டது. சரக்கு ரயில் மீது மோதியதில் ரயில் தடம் புரண்டது.

கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் அருகே உள்ள தண்டவாளத்தில் விழுந்தது.அப்போது அதில் வந்த யஷ்வந்த்பூர்-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலும் தடம்புரண்டது. இந்த ரயில் விபத்து ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர்ச்சிக்குள்ளாகி உள்ளது.
அதாவது நேற்று முன்தினம் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் விரைவு ரயில் மாலை 6.55 மணியளவில் சுமார் 128 கிமீ வேகத்தில் வேகமாக சென்றது. அப்போது தான் விபத்து நடந்தது. மாலை 6.55 மணி 28வது நொடியில் அதன் வேகம் 128 கிமீ ஆக இருந்துள்ளது. இந்த வேகத்தில் தான் டிராக் மாறிய அந்த ரயில் சரக்கு ரயில் மீது மோதியது. இந்த விபத்தை தொடர்ந்து அடுத்த 23 நொடிகளில் அதன் வேகம் கிடுகிடுவென குறைந்து ஜீரோவுக்கு வந்தது. இந்த 23 நொடியில் தான் கோரமண்டல் ரயில் சரக்ரயில் மீது மோதி பெட்டிகள் தடம்புரண்டு பயணிகள் பலியாகினர்.
இன்றைய காலை நிலவரப்படி ரயில் விபத்தில் மொத்தம 294 பேர் பலியாகி உள்ளது தெரியவந்துள்ளது. மேலும் 700க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் தான் ரயில் விபத்துக்கான காரணத்தையும், அதற்கு காரணமானவர்களையும் கண்டுபிடித்துவிட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். இதுதொடர்பாக ரயில்வே பாதுகாப்பு கமிஷனர் அறிக்கை தாக்கல் செய்வார் எனவும் அவர் தெரிவித்தார். இதுமட்டுமின்றி ரயிலில் மின்னணு இண்டர் லாக்கிங் சிஸ்டத்தால் ஏற்பட்ட மாற்றம் காரணமாக விபத்து நடந்துள்ளதாகவும், தற்போது மறு சீரமைப்பு பணிகளில் தான் எங்கள் முழு கவனமும் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் தான் ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை வழக்கறிஞர் விஷால் திவாரி தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ஒடிசார ரயில் விபத்து தொடர்பாக உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் உச்சநீதிமன்ற ஓய்வு நீதிபதி தலைமையில் நிபுணர் குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும். இந்த விசாரணையை 2 மாதத்தில் முடித்து அறிக்கை அளிக்கவும் உத்தரவு பிறப்பிக்க வேண்டும். இதுதவிர கவாச் பாதுகாப்பு முறையை ரயில்களில் அமல்படுத்த மத்திய அரசுக்கு அறிவுறுத்த வேண்டும் என்ற சாராம்சங்கள் உள்ளன.
மேலும் நாளை இந்த மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் எனவும் மனுதாரரான விஷால் திவாரி சார்பில் உச்சநீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்படுகிறது. இந்த கோரிக்கையை ஏற்கும்பட்சத்தில் நாளை உச்சநீதிமன்றத்தில் இந்த மனு அவசரமாக விசாரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications