"கும்பிட்டு" ஆரம்பித்து வைத்த அஸ்வினி வைஷ்ணவ்.. ஒடிசா விபத்து நடந்த இடத்தில் ரயில் சேவை தொடக்கம்
டெல்லி: ஒடிசாவில் ரயில் விபத்து ஏற்பட்ட இடத்தில் சீரமைப்பு பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், அங்கே ரயில் போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது.
ஒடிசாவின் பாலசோரில் நேற்று நடந்த பயங்கர ரயில் விபத்தில் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், மேலும் 900 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் சுமார் 50 பேர் படுகாயமடைந்த நிலையில், அவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கோரமண்டல் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட இரண்டு பயணிகள் ரயில் மற்றும் ஒரு சரக்கு ரயில் மோதிய இந்த விபத்து நாட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த விபத்தில் தப்பிப் பிழைத்தவர்கள் அங்கே கண்ட காட்சி கொடூரமாக இருந்ததாகவே குறிப்பிடுகிறார்கள்.
அதாவது ஷாலிமார்-சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் முதலில் லூப் டிராக்கில் இருந்த சரக்கு ரயிலில் மீது மோதி தடம் புரண்டது. இதன் பெட்டிகள் அருகே இருந்த தண்டவாளத்தில் விழுந்த நிலையில், அதில் பெங்களூரு-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலும் மோதியது. இப்படி இரண்டு பயணிகள் ரயில்களும், சரக்கு ரயில் ஒன்றும் மோதியதே விபத்தை மோசமானதாக மாற்றியது.
விபத்து நடந்த உடனேயே தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்பு நடவடிக்கையில் இறங்கினர். சனிக்கிழமை மதியம் தான் மீட்புப் பணிகள் நிறைவடைந்ததாக அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ரயில் பாதையைச் சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தன. முன்னதாக இது குறித்து ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில், "இந்த ரயில் விபத்தின் மீட்புப் பணிகள் நிறைவடைந்துவிட்டது. இப்போது ரயில் பாதையைச் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

தண்டவாளங்களைச் சீரமைக்கும் பணிகள் முடிந்துவிட்டது. மேலே உள்ள மின்சாரக் கம்பிகளை அமைக்கும் பணி நடந்து வருகிறது. நோயாளிகள் பலரும் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்குத் தேவையான சிகிச்சை தர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்று கூறியிருந்தார். இப்போது சீரமைப்பு பணிகள் அங்கே முழுமையாக நிறைவடைந்துவிட்டது.
அங்கே அப் லைன், டவுன் லைன் மற்றும் லூப் டிராக் என 3 பாதைகள் இருந்தன. இதில் டவுன் லைனில் இப்போது சீரமைப்பு பணிகள் முழுமையாக முடிவடைந்துவிட்டது. அங்கே ஞாயிறு இரவு வழக்கம் போல ரயில் சேவை தொடங்கியது. முதல் ரயில் அந்த வழியாகச் செல்லும் போது அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ரயிலைப் பார்த்துக் கும்பிட்டு வணங்கினார். இந்த வீடியைவோ அவரே தனது ட்விட்டரிலும் பகிர்ந்துள்ளார்.
Down-line restoration complete. First train movement in section. pic.twitter.com/cXy3jUOJQ2
— Ashwini Vaishnaw (@AshwiniVaishnaw) June 4, 2023
விரைவில் அங்குள்ள மற்ற இரண்டு டிராக்குகளிலும் சீரமைப்பு பணிகள் முழுமையாக நிறைவடையும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications