17ஆவது லோக்சபா சபாநாயகராக ஓம் பிர்லா போட்டியின்றி தேர்வு
Recommended Video
டெல்லி: 17ஆவது லோக்சபா சபாநாயகராக ஓம் பிர்லா (57) போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
நாடாளுமன்றத்தின் முதல் கூட்டத்தொடர் நேற்று முன் தினம் தொடங்கியது. இந்த கூட்டத் தொடரில் நேற்று முன் தினமும், நேற்றைய தினமும் புதிய எம்பிக்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

இவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிலையில் இன்றைய தினம் சபாநாயகருக்கான தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.
அதில் ராஜஸ்தானை சேர்ந்த பாஜக மூத்த தலைவர் ஓம் பிர்லாவை தேர்வு செய்ய ஆளும் கட்சி முடிவு செய்தது. இன்று நாடாளுமன்ற அவை கூடியபோது ஓம் பிர்லாவை சபாநாயகராக தேர்வு செய்வதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் முன் மொழிந்தார்.
இதைத் தொடர்ந்து ஓம் பிர்லாவுக்கு அதிமுக உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளும், காங்கிரஸ் கட்சியும், திமுகவும் முழு ஆதரவு தந்ததை அடுத்து அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
இதையடுத்து அவரை இருப்பிடம் சென்று அழைத்து வந்த பிரதமர் மோடி, சபாநாயகருக்கான இருக்கைக்கு அழைத்து சென்று அமரவைத்து வாழ்த்து தெரிவித்தார். அவருக்கு மக்களவை காங்கிரஸ் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, திமுக எம்பி டி.ஆர்.பாலு உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
சபாநாயகர் தேர்வு செய்யப்பட்ட பிறகு, அவரை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டி பேசினார். இதையடுத்து அமைச்சர்களை ஓம் பிர்லாவுக்கும் மற்ற உறுப்பினர்களுக்கும் அறிமுகப்படுத்தி வைத்தார்.












Click it and Unblock the Notifications