கொரோனா கால கட்டுப்பாடுகள் ஜனவரி 31-ந் தேதி வரை நீட்டிப்பு- மத்திய அரசு
டெல்லி: ஓமிக்ரான் பரவல் அதிகரித்துள்ள நிலையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தேவைப்பட்டால் ஊரடங்கை அமல்படுத்தலாம் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தி உள்ளது. மேலும் கொரோனா கால கட்டுப்பாடுகள் அடுத்த ஆண்டு ஜனவரி 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு விதித்த கொரோனா கால கட்டுப்பாடுகள் மாதந்தோறும் நீட்டிக்கப்பட்டு வருகின்றன. இந்தியாவில் தற்போதைய நிலையில் 578 பேருக்கு ஓமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போதைய கட்டுப்பாடுகள் டிசம்பர் 31-ந் தேதி வரை அமலில் உள்ளன.

இந்த நிலையில் மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா, மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு சுற்றிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார். அதில், தற்போது நடைமுறையில் இருக்கும் கொரோனா கால கட்டுப்பாடுகள் ஜனவரி 31-ந் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவைப்படும் நிலையில் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்டவைகளை மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் அமல்படுத்தலாம்.
பண்டிகை காலங்களில் கூட்டங்களைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகள் விதிப்பது குறித்தும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பரிசீலிக்கலாம். அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தடுப்பு விதிகளை அமல்படுத்த வேண்டும். கொரோனா தடுப்பு விதிகளை மீறுவோர் மீது இந்திய குற்றவியல் சட்டம் 188-க் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பல மாநிலங்களில் டெல்டா வகை கொரோனா வைரஸ், உருமாறிய ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. இதனால் மாவட்டங்கள் அளவில் கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஆலோசிக்கலாம். அனைத்து மாநிலங்களும் கொரோனா பரிசோதனை, சிகிச்சை, தடுப்பூசி போடுதல் ஆகியவற்றையும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் பின்பற்ற வேண்டும் எனவும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications