அதிகரிக்கும் ஓமிக்ரான் பரவல்: மத்திய அரசு பணியாளர்கள் 50% பேர் வீட்டில் இருந்து பணிபுரிய அனுமதி
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மத்திய அரசு பணியாளர்கள் 50% பேர் வீட்டில் இருந்து பணிபுரிய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
இந்தியாவிலும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. ஓமிக்ரான் எனும் உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உலக நாடுகளின் கொரோனா பரவல் எண்ணிக்கையில் இந்தியா தற்போது 10-வது இடத்தில் இருக்கிறது.

மாநிலங்களில் கட்டுப்பாடுகள்
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் நாட்டின் பல மாநிலங்களில் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. திரையரங்குகள், ஜிம்கள், ஸ்பாக்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. உணவகங்கள் உள்ளிட்டவை 50% வாடிக்கையாளர்களுடன் இயங்க மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசிகள்
கொரோனா தடுப்பூசிகள் போடும் பணியும் நாடு முழுவதும் முடுக்கி விடப்பட்டுள்ளது. மேலும் 15 வயது முதல் 18 வயது வரையிலான சிறுவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் நேற்று முதல் தொடங்கி உள்ளது. நேற்று முதல் நாளில் மட்டும் 40 லட்சம் சிறுவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

மத்திய அரசு அனுமதி
இந்நிலையில் மத்திய அரசும் பணியாளர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை விடுத்துள்ளது. மத்திய அரசு பணியாளர்களில் 50% பேர் வீடுகளில் இருந்து பணிபுரிவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசு அலுவலகங்களில் சார்புநிலைச் செயலாளர்களுக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகள், பணியாளர்களில் 50% பேர் அலுவலகத்திலும் எஞ்சிய 50% பேர் வீடுகளில் இருந்தும் பணிபுரியலாம் என மத்திய அரசு அனுமதித்துள்ளது.
Recommended Video

கூட்டம் கூடுவதை தடுக்க அறிவுறுத்தல்
அத்துடன் கர்ப்பிணிகள், மாற்றுத் திறனாளி பணியாளர்கள் அலுவலகங்களுக்கு வருவதில் இருந்தும் விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது. மேலும் கொரோனா கட்டுப்பாட்டு மண்டல பகுதிகளில் வசிக்கின்ற அதிகாரிகள், பணியாளர்களும் அலுவலகங்களுக்கு வருவதில் இருந்து மத்திய அரசு விலக்கு அளித்திருக்கிறது. அதேபோல் மத்திய அரசு அலுவலகங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூட்டமாக கூடுவதைத் தவிர்க்க அலுவல் நேரங்களில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு பணியாளர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications