விவசாயிகள் போராட்டம்: பஞ்சாப் விவசாயி, போலீஸ்காரர் மாரடைப்பால் பலி.. கண்ணீர் புகை குண்டு காரணமா?
டெல்லி: டெல்லியில் மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் விவசாயி ஒருவரும், போலீஸ்காரரும் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேளாண் விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை, விவசாய கடன் தள்ளுபடி, விவசாயிகளுக்கு ஓய்வூதியம், விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும், போராட்டத்தின் போது உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க வேண்டும், மின்சார சட்டத் திருத்த மசோதாவை ரத்து செய்ய வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தலைநகர் டெல்லியில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவதாக அறிவிப்பு வெளியானது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விவசாயிகள் போராட்டம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் அதை ஒடுக்க டெல்லி எல்லையில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
விவசாயிகள் டெல்லி எல்லைக்குள் வரமுடியாதபடி தடுப்புகள் அமைத்து எல்லை மூடப்பட்டது. இதையடுத்து கடந்த 12 ஆம் தேதி தடுப்புகளை மீறி விவசாயிகள் டெல்லி எல்லைக்குள் நுழைய முயன்ற போது அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தி, கண்ணீர் புகைகுண்டுகளை வீசி அவர்களை கலைத்தனர்.
எனினும் டெல்லி எல்லையான சாம்பு, திக்ரி, காசிபூர், சிங்வாலா உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் சண்டீகரில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய அமைச்சர்கள் குழு பேச்சுவார்த்தை நடத்தியது.
இதில் சுமூக உடன்பாடு எட்டப்படவில்லை. இந்த நிலையில் பஞ்சாப்பில் ரயில் மறியல் போராட்டமும் நடைபெற்றது. நேற்று முன்தினம் நள்ளிரவில் விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டு வீசி தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் சாம்பு எல்லையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் போராடி வரும் நிலையில் பஞ்சாப்பை சேர்ந்த 65 வயதான கியான் சிங் மாரடைப்பால் மரணமடைந்தார். இதுகுறித்து அவரது உறவினர் கூறுகையில், "பஞ்சாப் மாநிலம் குருதாஸ்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கியான் சிங். இவர் டிராலியில் சில விவசாயிகளுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அதிகாலை 3 மணிக்கு அவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார். இதையடுத்து சாம்பு காவல் நிலையத்திற்கு அருகே உள்ள ஆம்புலன்ஸை அழைத்தோம். அதில் ராஜ்புரா அரசு மருத்துவமனைக்கு சென்றோம். பின்னர் அங்கு அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதால் பாட்டியாலாவில் உள்ள ரஜீந்திர மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர்.
இதையடுத்து ஆம்புலன்ஸிலேயே அவருக்கு ஆக்ஸிஜன் கொடுக்கப்பட்டது. காலை 5 மணிக்கு மருத்துவமனையை அடைந்தோம். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி காலை 7.45 மணிக்கு கியான் சிங் இறந்துவிட்டார்". இவ்வாறு உறவினர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இதனிடையே அரசு ரயில்வே போலீஸ் படையின் அதிகாரி ஹிரா லால். இவருக்கு வயது 56. இவர் சாம்பு எல்லையில் பாதுகாப்பு பணிக்காக நிறுத்தப்பட்டிருந்தார். அங்கு அவருக்கு மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் பிப்ரவரி 13 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கண்ணீர் புகை குண்டு வீசியதால் இவர்களுக்கு சுவாசிப்பதில் பாதிப்பு ஏற்பட்டு மாரடைப்பு வந்ததா என்பதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications