டெல்லி நீதிமன்றத்தில் பரபரப்பு.. திடீரென வெடித்துச் சிதறிய மர்ம பொருள்.. காவலர் படுகாயம்
டெல்லி: தலைநகர் டெல்லியில் உள்ள ரோகிணி நீதிமன்றத்தில் திடீரென மர்ம பொருள் வெடித்துச் சிதறியதில் ஒருவர் காயமடைந்தார்.
டெல்லியில் உள்ள ரோகிணி நீதிமன்றத்தில் இன்று காலை திடீரென மர்மப் பொருள் ஒன்று வெடித்துச் சிதறியது. இதில் காவலர் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

இந்த சம்பவம் காரணமாக நீதிமன்ற நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், அனைத்து நீதிமன்றத்தின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதலில் நீதிமன்ற அறை எண் 102ல் உள்ள லேப்டாப் வெடித்ததாகவே கூறப்பட்டது. இருப்பினும், முதற்கட்ட விசாரணையில் குறைந்த தீவிரம் கொண்ட வெடிகுண்டு வெடித்துச் சிதறியதாக டெல்லி காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் இருந்து மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனம் (IED) மற்றும் டிபன் பாக்ஸ் போன்ற ஒரு பொருளும் மீட்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து டெல்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது. குண்டு வெடிப்பு குறித்த தகவல் கிடைத்ததும் சிறப்புக் காவல் ஆணையர் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார்
மேலும், நீதிமன்றத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு என்பதால் தேசியப் பாதுகாப்புப் படை குழுவும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளது, வெடி விபத்து குறித்து தங்களுக்குக் காலை 10.40 மணியளவில் தகவல் கிடைத்தது, அதைத் தொடர்ந்து 7 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகத் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக கடந்த சில வாரங்களுக்கு முன் இதே ரோகிணி நீதிமன்றத்தில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் தான் 3 பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications