’ஒரே நாடு ஒரே தேர்தல்’ வேகம் எடுக்கிறதா பணிகள்? ராம்நாத் கோவிந்த் தலைமையில் 23 ஆம் தேதி கூட்டம்
டெல்லி: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள அமைக்கப்பட்ட குழுவின் முதல் கூட்டம் வரும் 23 ஆம் தேதி டெல்லியில் நடைபெறுகிறது. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் சூழலில் இந்தக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மத்தியில் ஆளும் மோடி தலைமையிலான பாஜக அரசு 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டம் குறித்து கடந்த 2014 ஆம் ஆண்டு முதலே அவ்வப்போது பேசி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக பிரதமர் மோடியே ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவாக அவ்வப்போது பேசுவதை காண முடிகிறது. கடந்த சில ஆண்டுக்கு முன்பு இதுகுறித்த பேச்சு எழுந்த நிலையில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனால், ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை மத்திய அரசு கிடப்பில் போட்டது. இந்த நிலையில், தான் 2024 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி கொண்டு இருக்கும் இந்த சூழலில், நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. வரும் 18 முதல் 22ம் தேதி வரை நாடாளுமன்றத்தின் சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
5 அமர்வுகளாக இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ள நிலையில் கூட்டத்தொடருக்கான நிகழ்ச்சி நிரல் குறித்தும் முதலில் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை. இதனால் பல்வேறு யூகங்கள் கிளம்பின. குறிப்பாக மத்திய அரசு ‛ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாக பரபரப்பு எழுந்தது. அதேபோல், இந்தியாவின் பெயரை பாரத் என மாற்றப்பட இருப்பதாகவும் அது குறித்து மசோதா கொண்டு வரப்படலாம் எனவும் கூறப்பட்டது.
இந்த யூகங்களுக்கு தீனி போடும் வகையில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து ஆய்வு செய்ய முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் உறுப்பினர்களாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் கட்சியின் மக்களவைத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, மாநிலங்களவை முன்னாள் தலைவர் குலாம் நபி ஆசாத், 15-வது நிதிக் குழுவின் தலைவர் என்.கே. சிங்,
மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர் சுபாஷ் காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் நியமிக்கப்பட்டு இருந்தனர். எனினும், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி குழுவில் இடம் பெற மறுப்பு தெரிவித்து விட்டார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் நாட்டில் உள்ள கட்டமைப்பைக் கருத்தில் கொண்டு, நாடாளுமன்ற மக்களவை, மாநில சட்டமன்றங்கள், நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து இந்தக் குழு பரிந்துரை அளிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் குழுவின் முதல் கூட்டம் செப்.23 ஆம் தேதி நடைபெறும் என்று குழுவின் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார். இந்தக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தல் பற்றி ஆய்வு செய்யப்பட உள்ளது.












Click it and Unblock the Notifications