Dream11 டூ My11Circle வரை.. மத்திய அரசின் ஆன்லைன் கேமிங் மசோதாவால் எந்தெந்த செயலிகளுக்கு பாதிப்பு?
டெல்லி: ஆன்லைனில் பணம் கட்டி விளையாடும் சூதாட்டம் மற்றும் பந்தய செயலிகளை கட்டுப்படுத்தி, தடை செய்யும் வகையில் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் வழங்கியது. இந்த மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. இந்த மசோதா இருசபைகளிலும் நிறைவேற்றப்படும் பட்சத்தில் ஆன்லைன் சூதாட்டம் - பந்தய செயலிகளை மத்திய அரசால் தடை செய்ய முடியும். அப்படி என்றால் எந்தெந்த செயலிகள் பிரச்சனையை எதிர்கொள்ளும் என்பது பற்றிய முழு விவரம் வெளியாகி உள்ளது.
நம் நாட்டில் தற்போது அனைவரின் கையிலும் ஸ்மார்ட் போன்கள் வந்துவிட்டது. அதேபோல் பணம் கட்டி விளையாடும் வகையிலான சூதாட்டம் - பந்தய செயலிகள் ஏராளமாக உள்ளன. இந்த செயலிகளில் பணம் கட்டி விளையாடி ஏராளமானவர்கள் நஷ்டமடைகின்றனர். பலரும் கடனில் தள்ளப்படுகின்றனர்.

இதனால் மனவருத்தத்தில் ஏராளமானவர்கள் தற்கொலை செய்துள்ளனர். இதனால் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பந்தய செயலிகளை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து இருந்து வருகிறது. இந்நிலையில் தான் ஆன்லைன் கேமிங் செயலிகளை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு புதிய மசோதாவை கொண்டு வந்துள்ளது.
இந்த மசோதாவிற்கான பெயர் Promotion & Regulation of Online Gaming Bill 2025 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. தமிழில் சொல்ல வேண்டும் என்றால் ஆன்லைன் கேமிங் ப்ரோமோஷன் மற்றும் கட்டுப்பாடு மசோதா 2025 என்று கூறலாம். இந்த மசோதாவிற்கு நேற்று பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த மசோதா இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளது. மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மசோதாவை தாக்கல் செய்யலாம்.
இந்த மசோதாவின் முக்கிய நோக்கம் ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பெட்டிங் விளையாட்டுகளில் மக்கள் ஏமாறாமல் தடுப்பது தான். இந்த மசோதாவின் சிறப்பம்சம் என்னவென்றால் பந்தயம் மற்றும் சூதாட்டம் தொடர்பான ஆன்லைன் கேமிங் தளங்களுக்குக் கடுமையான விதிகளை மத்திய அரசால் வகுக்க முடியும். அதேபோல், ஆன்லைன் சூதாட்டம் - பந்தயத்துக்கான பணத்தை வங்கி கணக்குகளில் இருந்து மாற்ற முடியாதபடி செய்யலாம். அபராதங்கள், மற்றும் செயலிகளைத் தடை செய்வது போன்ற நடவடிக்கைகளை எடுக்கும் அதிகாரம், பந்தயம் தொடர்பான கேமிங் செயலிகளை விளம்பரப்படுத்த தடை விதிப்பது உள்ளிட்ட அதிகாரங்கள் மத்திய அரசுக்கு கிடைக்கும்.
இந்த மசோதா நாடாளுமன்றத்தின் இருசபைகளிலும் நிறைவேறி ஜனாதிபதி திரெளபதி முர்மு ஒப்புதலுடன் சட்டமாக்கப்படும்போது தற்போது பிரபலமாக உள்ள பல ஆன்லைன் சூதாட்டம் மற்றும் பந்தய செயலிகள் சிக்கல் சந்திக்கும். அந்த வகையில் பார்த்தால் Dream11, Games24x7, Winzo, GamesKraft, 99Games, KheloFantasy, My11Circle உள்பட இன்னும் பல செயலிகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. இந்த செயலிகள் நேரடியாக தடையை விதிக்கும்படியாக இல்லை. இருப்பினும் அந்த செயலிகளை கட்டுப்பாடுகளை எதிர்கொள்ள உள்ளன.
நம் நாட்டை பொறுத்தவரை தற்போது ஆன்லைன் கேமிங் மார்க்கெட்டின் சந்தை மதிப்பு என்பது 3.7 பில்லியன் டாலர் என்ற அளவில் உள்ளது. இதில் 86 சதவீத வருவாய் Real Money முறையில் செல்கிறது. தற்போதைய இந்த சந்தை மதிப்பை 2029ம் ஆண்டுக்குள் இரண்டு மடங்கு அதிகரித்து 9.1 பில்லியன் டாலராக உயர்த்த ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் இலக்கு நிர்ணயம் செய்துள்ளன. இப்போது மத்திய அரசு கொண்டு வரும் இந்த மசோதா என்பது ஆன்லைன் கேமிங் நிறுவனங்கள் அதிகம் பாதிக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது.












Click it and Unblock the Notifications