பீகார் வாக்காளர் திருத்தம்.. விவாதம் கோரும் எதிர்க்கட்சி எம்பிக்கள்! மக்களவையில் அமளி
டெல்லி: பஹல்காம் தாக்குதல் குறித்தும், அதற்கு இந்தியா கொடுத்த ஆபரேஷன் சிந்தூர் பதிலடி குறித்தும் இன்று மக்களவையில் 16 மணி நேர சிறப்பு விவாதம் தொடங்குகிறது. ஆனால் எதிர்க்கட்சி எம்பிக்கள், பீகார் வாக்காளர் சிறப்பு திருத்தம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.
மக்களவைக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகை தந்திருக்கும் நிலையில், பீகார் வாக்காளர் சிறப்பு திருத்தத்திற்கு எதிராக எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பி வருகின்றனர். அதேபோல நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்திலும் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த போராட்டத்தில் பிரியங்கா காந்தி, ஆ.ராசா, ஜோதிமணி உள்ளிட்ட எம்பிக்கள் பங்கேற்கிறார்கள்.

கடந்த 21ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. தொடக்கம் முதல் கூட்டத்தொடர் கடுமையான சலசலப்புகளுடன்தான் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதம் நடைபெற இருப்பதால், கூட்டதொடர் மீதான எதிர்பார்ப்பு எழுந்திருந்தது.
ஆபரேஷன் சிந்துார், ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சிகளுக்கிடையே ஒரு முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. எதிர்க்கட்சிகள் இது குறித்து விரிவான விவாதத்தை நடத்த வலியுறுத்துகின்றன. ஆனால் நடைமுறை சிக்கல்கள் காரணமாக விவாதம் தாமதமாகிறது என்றும், திட்டமிட்டபடி நடக்கவில்லை என்றும் பாஜக கூறி வருகிறது.
கடநத ஏப்ரல் மாதம் 22ம் தேதியன்று நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு உளவுத்துறையின் தோல்வியே காரணம் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மட்டுமல்லாது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடர்ந்து ஏற்பட்ட இந்தியா-பாகிஸ்தான் மோதலை நான்தான் தடுத்து நிறுத்தினேன் என்று கூறி டிரம்ப் மத்தியஸ்தம் செய்ததையும், மத்திய அரசுக்கு எதிரான விமர்சனமாக முன் வைத்திருக்கிறார்கள்.
ஆபரேஷன் சிந்துாருக்கு உலக நாடுகளின் ஆதரவு இல்லை என்றும், டிரம்ப் திரும்பத் திரும்ப மத்தியஸ்தம் செய்ய முன்வந்தது, மத்திய அரசின் பலவீனத்தை உணர்த்துவதாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்திருக்கிறார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான மோதல் நான்கு நாட்கள் நீடித்தது. இந்தியா பயங்கரவாத கட்டமைப்பை குறிவைத்து தாக்குதல் நடத்தியது. இதற்கு பாகிஸ்தான் இராணுவ ரீதியாக பதிலளித்தது. பின்னர் போர் நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. அதன் பிறகு இரு தரப்பினரும் சண்டையை நிறுத்தினர். இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானின் பல விமான தளங்கள் கடுமையாக சேதமடைந்ததாக கூறப்படுகிறது.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கையாள்வதில் இந்தியா ஒரு "புதிய அணுகுமுறையை" உருவாக்கியுள்ளது என்றும், பயங்கரவாதிகளையும் அவர்களுக்கு ஆதரவளிப்பவர்களையும் ஒரே மாதிரியாக நடத்தும் என்றும் பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
இன்றைய நிகழ்ச்சி நிரல்: இன்று மக்களவையில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆபரேஷன் சிந்துார் பற்றிய விவாதத்தைத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உள்துறை மந்திரி அமித் ஷா, வெளியுறவு மந்திரி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் பாஜக எம்பிக்கள் அனுராக் தாக்கூர் மற்றும் நிஷிகாந்த் துபே ஆகியோரும் இந்த விவாதத்தில் பங்கேற்க வாய்ப்புள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் இந்த விவாதத்தில் தலையிட வாய்ப்புள்ளது. மேலும் மாநிலங்களவையிலும் அவர் தலையிடலாம். ஆபரேஷன் சிந்துார் குறித்த மாநிலங்களவை விவாதம் செவ்வாய்க்கிழமை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ராஜ்நாத் சிங் மற்றும் எஸ்.ஜெய்சங்கர் ஆகியோர் உரையாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய "வலிமையான, வெற்றிகரமான மற்றும் தீர்க்கமான ஆபரேஷன் சிந்துார்" குறித்து மக்களவையில் சிறப்பு விவாதம் நடைபெறும் என மக்களவையின் நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனுராக் தாக்கூர், சுதான்ஷு திரிவேதி மற்றும் நிஷிகாந்த் துபே போன்ற முக்கிய மந்திரிகள் மற்றும் தலைவர்களுடன், ஆபரேஷன் சிந்துாருக்குப் பிறகு 30 உலக தலைநகரங்களுக்குச் சென்ற ஏழு பல கட்சி பிரதிநிதிகளின் என்டிஏ உறுப்பினர்களான ஸ்ரீகாந்த் ஷிண்டே, சஞ்சய் ஜா மற்றும் ஹரீஷ் பாலயோகி ஆகியோரும் உரையாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவிற்கு சென்ற குழுவிற்கு தலைமை தாங்கிய சஷி தரூர் மத்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்திருந்தார். அவரது நிலைப்பாடு காங்கிரசுடனான உறவை பாதித்துள்ளதால் அவர் உரையாற்ற தேர்ந்தெடுக்கப்படுவாரா என்பது ஒரு பெரிய கேள்விக்குறியாக உள்ளது.
நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி கிரண் ரிஜிஜு கூறுகையில், "ஆபரேஷன் சிந்துார் குறித்து இன்று மக்களவையில் 16 மணி நேரமும், நாளை மாநிலங்களவையில் 16 மணி நேரமும் விவாதிக்கப்படும். அனைத்து பிரச்சினைகளையும் ஒன்றாக விவாதிக்க முடியாது. பீகாரில் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) செய்வது குறித்து எதிர்க்கட்சிகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளன. ஆபரேஷன் சிந்துார் குறித்து முதலில் விவாதிக்கப்படும் என்று அவர்களிடம் கூறியுள்ளோம். அதன் பிறகு எந்த பிரச்சினைகள் குறித்து விவாதிப்பது என்று முடிவு செய்வோம்" என்றார்.
பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் (எஸ்ஐஆர்) செய்யப்படுவதை எதிர்த்து இன்று காலை 10.30 மணிக்கு எதிர்க்கட்சி தலைவர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே மாகர் துவாரில் போராட்டம் நடத்த உள்ளனர். ஜூலை 25 அன்று, மாநிலங்களவையில் பல எதிர்க்கட்சி எம்பிக்கள் மழைக்கால கூட்டத்தொடரில் எஸ்ஐஆர் பிரச்சினை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று கூறி ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்திருந்தனர்.
மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 21-ல் தொடங்கி ஆகஸ்ட் 21 வரை 32 நாட்களில் 21 அமர்வுகளை உள்ளடக்கியது. சுதந்திர தின விடுமுறைக்கு பிறகு ஆகஸ்ட் 12-ல் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டு ஆகஸ்ட் 18-ல் மீண்டும் கூடும் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications