ஆபரேஷன் சிந்தூரில் வெற்றி மேல் வெற்றி.. கந்தஹார் விமான கடத்தலில் மூளையாக செயல்பட்ட அப்துல் அசார் சாவு!
டெல்லி: ஆபரேஷன் சிந்தூரில் பயங்கரவாதி அப்துல் ரவூப் அசார் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 1999ல் கந்தஹார் விமானக் கடத்தலில் மூளையாகச் செயல்பட்டவர் அப்துல் ரவூப் அசார், ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரின் இளைய சகோதரன் என்பது குறிப்பிடத்தக்கது.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் நேற்று ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது. பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இறங்கி அடித்த இந்தியா, அங்கு 9 இடங்களில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்களை அழித்தது. இந்தத் தாக்குதலில் 100க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கலாம் என அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

அப்துல் ரவூப் அசார்
இதற்கிடையே சர்வதேச அளவில் தேடப்பட்டு வரும் பயங்கரவாதியான அப்துல் ரவூப் அசாரும் இந்திய ராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர் 1999ல் நடந்த கந்தஹார் விமானக் கடத்தலில் மூளையாகச் செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் தளபதியாக இருந்தவர் அசார், ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக இந்தியாவால் பல ஆண்டுகளாகத் தேடப்படும் பயங்கரவாதிகளில் ஒருவராகவும் இருந்தார். இவர் ஜெய்ஷ்-இ-முகமது தலைவர் மசூத் அசாரின் இளைய சகோதரரும் ஆவார். பாகிஸ்தானின் பஹாவல்பூரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது தலைமையகத்தில் நடந்த தாக்குதலில் அசார் கொல்லப்பட்டுள்ளார்.
உயிரிழப்பு
ஜெய்ஷ்-இ-முகமது தலைமையகத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் மசூத் அசாரின் குடும்ப உறுப்பினர்கள் 10 பேர் கொல்லப்பட்டிருந்தனர். இந்தத் தாக்குதலில் அசார் முதலில் படுகாயமடைந்திருந்தார். இந்தச் சூழலில் அவர் இப்போது உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
யார் இவன்?
இது தொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், "இந்தத் தாக்குதலில் ஜெய்ஷே-முகமது அமைப்பின் முக்கியமான தளபதியும் 1999 விமானக் கடத்தலின் மூளையாகச் செயல்பட்ட தீவிரவாதியுமான அப்துல் ரவூப் அசார் கொல்லப்பட்டுள்ளார். 1999ல் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டதில் ரவூப் அசாரின் பங்கு முக்கியமானது. இதை வைத்து வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் லேலை செய்து வந்த அமெரிக்க-யூத பத்திரிகையாளரான டேனியல் பெர்லைக் கடத்தி கொலை செய்த முக்கிய அல்-கொய்தா தீவிரவாதி உமர் சயீத் ஷேக்கை விடுவிக்க வைத்தான்" என்றார்.
விமான கடத்தல்
1999 டிசம்பரில் காத்மாண்டுவிலிருந்து டெல்லிக்குச் செல்லும் வழியில் இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான IC-814 விமானம் கடத்தப்பட்டது. இந்த விமான கடத்தலில் ஈடுபட்டவர்களில் அப்துல் ரவூப் அசாரும் ஒருவர். மொத்தம் 5 தீவிரவாதிகள் விமானத்தைக் கடத்தி, தாலிபான் கட்டுப்பாட்டில் இருந்த ஆப்கானிஸ்தானுக்கு கொண்டு சென்றனர். விமானப் பயணிகளை விடுவிக்க மசூத் அசாரை விடுவிக்க வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டது.
மசூத் அசார்
மசூத் அசார் விடுதலையான பிறகு, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை நிறுவினார். இந்த அமைப்பே பிறகு 2001 நாடாளுமன்றத் தாக்குதல் உட்பட இந்திய மண்ணில் பல நாசவேலைகளில் ஈடுபட்டன. இந்திய ராணுவம் நடத்திய இந்த ஆபரேஷன் சிந்தூரில் அசார் மசூத் ஆசாரின் 10 குடும்ப உறுப்பினர்கள் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நள்ளிரவில் இந்தியா நடத்திய தாக்குதல் 25 நிமிடங்கள் மட்டுமே நீடித்தாலும் அது மிக துல்லியமான தாக்குதலாக இருந்தது. பாகிஸ்தானில் உள்ள பொதுமக்களுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாத வகையில் தீவிரவாதிகளை மட்டுமே குறிவைத்து இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியிருந்தது.












Click it and Unblock the Notifications