வாக்சின் பாலிசி.. பிரதமரின் லேட் முடிவால் பல உயிர்கள் பறிபோனது.. எதிர்க்கட்சி தலைவர்கள் ரியாக்ஷன்
டெல்லி: ஜூன் 21ம் தேதி முதல் தடுப்பூசி கொள்கையை மாற்றப்போவதாக பிரதமர் நரேந்திரமோடி நேற்று தனது தொலைக்காட்சி உரையில் தெரிவித்தார்.
மாநிலங்கள் இனி வாக்சின் கொள்முதல் செய்ய வேண்டாம், மத்திய அரசே 75 சதவீத வாக்சின்களை இலவசமாக வழங்கும் எனவும் மோடி அறிவித்தார்.
இதை பாஜக ஆதரவாளர்கள் மோடியின் மாஸ்டர் ஸ்ட்ரோக் என சமூக வலைத்தளத்தில் ஹேஷ்டேக் போட்டு சிலாகிக்கிறார்கள். ஆனால் ரொம்ப காலம் தாழ்ந்த இந்த முடிவால் பல உயிர்கள் பறிபோயுள்ளன என்று மமதா பானர்ஜி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
|
பினராயி விஜயன்
மோடியின் அறிவிப்புக்கு யார் யார் எப்படி ரியாக்ஷன் செய்துள்ளனர். இதோ ஒரு ரவுண்ட்அப்: கேரள முதல்வர் பினராயி விஜயன்- 21ம் தேதி முதல் மாநிலங்களுக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி தரப்படும் என பிரதமர் அறிவித்துள்ளார். இந்த காலகட்டத்திற்கு உரித்தான அறிவிப்பு இது. எங்களது கோரிக்கை ஏற்கப்பட்டதில் மகிழ்ச்சியடைகிறேன்.
|
மமதா பானர்ஜி
மேற்கு வங்க முதல்வர், மமதா பானர்ஜி- கடந்த பிப்ரவரி மாதம் முதல், பல முறை, நான் பிரதமருக்கு, இலவச தடுப்பூசி வழங்குவது தொடர்பாக கடிதம் எழுதியுள்ளேன். ஆனால் இந்த முடிவை எடுக்க 4 மாதங்கள் ஆகியுள்ளது. கடைசியாக எங்களது குரலை பிரதமர் செவிமடுத்துள்ளார். மக்களின் நலன்தான் முக்கியத்துவம் தரப்பட வேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக பிரதமர் எடுத்த தாமதமான முடிவால் பலரை இழந்துள்ளோம். இனியாவது சரியான முறையான தடுப்பூசி இயக்கம் முன்னெடுக்கப்படும் என்று நம்புகிறேன்.
|
ஜெய்ராம் ரமேஷ்
காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்- 18 முதல் 44 வயதுடைய மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்க வேண்டும் என்ற மாநிலங்களின் கோரிக்கையை மோடி செவிமடுக்கும் முன்பாக நிறைய இழப்புகளை சந்தித்துவிட்டோம். பணிவாக இருப்பது அவருக்கு தீங்கு விளைவிக்காது.
மனிஷ் சிசோடியா
டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா- மாண்புமிகு உச்சநீதிமன்ற தலையீட்டிற்குப் பிறகு, நாடு முழுவதும் உள்ள அனைத்து வயதினருக்கும் இலவச தடுப்பூசி கிடைக்கும் என்று பிரதமர் அறிவித்துள்ளதற்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
மத்திய அரசு விரும்பினால், அதை நீண்ட காலத்திற்கு முன்பே செய்திருக்க முடியும், ஆனால் மத்திய அரசின் கொள்கைகள் காரணமாக, எந்த மாநிலங்களும் தடுப்பூசி வாங்க முடியவில்லை அல்லது மத்திய அரசு அதைக் கொடுக்கவில்லை.
|
ராகுல் காந்தி
இவ்வாறு தலைவர்கள் கருத்து கூறியுள்ள நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, இன்னொரு கேள்வியை முன்வைத்துள்ளார். ராகுல் காந்தி கூறுகையில், ஒரு எளிய கேள்வியை முன்வைக்கிறேன். எல்லோருக்குமே தடுப்பூசி இலவசம் என்றால், தனியார் மருத்துவமனைகள் ஏன் கட்டணம் வசூலிக்க வேண்டும்? இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார் நரேந்திர மோடி. அதாவது எம்.ஆர்.பி விலையை விட அதிகபட்சம் 150 ரூபாய் வரை விலை வைத்து தனியார் மருத்துவமனைகள் கொரோனா தடுப்பூசி செலுத்தலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதை இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஏன் தனியார் மருத்துவமனைக்கும் இலவசமாக தரவில்லை என்பது ராகுல் காந்தி கேள்வியாக உள்ளது.