புதிய நாடாளுமன்ற கட்டிடம்.. பிரதமர் மோடி திறக்க ராகுல், எதிர்க்கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பு
டெல்லி: நமது நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மேலும் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை நாட்டின் ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும் எனவும் ராகுல் காந்தி வலியுறுத்தி உள்ளார்.
நாட்டின் புதிய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு பிரதமர் மோடி 3 ஆண்டுகளுக்கு முன்னர் அடிக்கல் நாட்டினார். இக்கடடிடத்தின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்த நிலையில் மே 28-ந் தேதி பிரதமர் மோடி திறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே 28-ந் தேதி இந்துத்துவவாதி சாவர்க்கர் பிறந்த நாளில் நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறப்பதா? என ஏற்கனவே சர்ச்சை வெடித்துள்ளது.

இந்நிலையில் பிரதமர் மோடி, நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறந்து வைக்க ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ராகுல் காந்தி கூறியதாவது: புதிய நாடாளுமன்ற கடிட்டத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிக்கு அப்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டார். நாட்டின் நாடாளுமன்றத்தின் ஜனாதிபதியின் அரசிய சாசனப்படியான பங்களிப்பை இது நிராகரிப்பதாகும். ஆகையால் நாட்டின் புதிய நாடாளுமன்றத்தை ஜனாதிபதிதான் திறந்து வைக்க வேண்டும். இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
ஆர்ஜேடி எம்பி மனோஜ் கே ஜா கூறுகையில், நாடாளுமன்ற புதிய கட்டிடத்தை ஜனாதிபதி திறந்துவைக்காவிட்டால் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவேன் என தெரிவித்துள்ளார். மேலும் காந்தியும் சாவர்க்கரும் ஒரே சட்டகத்தில் இருக்க முடியாது; அம்பேத்கரும் கோல்வாக்கரும் ஒரே சட்டகத்தில் இருக்க முடியாது என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி ராஜா கூறுகையில், நாட்டின் நாடாளுமன்றத்தை ஜனாதிபதி திரவுபதி முர்முதான் திறந்து வைக்க வேண்டும். அதுதான் மரபு என்றார்.
காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால், அரசியல் சாசன விழுமியங்களையும் மரபுகளையும் மீறக் கூடியவராக இருக்கிறார் பிரதமர் மோடி. நாட்டின் ஜனாதிபதிதான் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தைத் திறந்து வைக்க வேண்டும் என்றார்.












Click it and Unblock the Notifications