"நெட்" மட்டும்தானா? நீட் தேர்வையும் ரத்து செய்யுங்க.. மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் நெருக்கடி!
டெல்லி: நெட் தேர்வை ரத்து செய்தது போல நாடு முழுவதும் பல லட்சம் மாணவர்கள் எழுதிய இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுத்து வருகின்றன. உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான யுஜிசி நெட் தேர்வு நேற்று நடைபெற்ற நிலையில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்பதால் இன்று அத்தேர்வை ரத்து செய்வதாக மத்திய அரசு அறிவித்த நிலையில் நீட் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என கோருகின்றன எதிர்க்கட்சிகள்.
கல்லூரிகளில் உதவிப் பேராசிரியராக (Asst. Prof) பணிபுரிவதற்கு NET அல்லது SET ஆகிய தேர்வுகளில் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருத்தல் அவசியம். நெட் தேர்வு எழுதி பாஸ் செய்தால் இளநிலை ஆராய்ச்சி நிதியுதவி- Junion Research Fellow மூலமாக மாத நிதி உதவி பெற்று முனைவர் பட்டம் பெறலாம். இதற்காகவும் நெட் தேர்வு எழுதப்படுகிறது. நாடு முழுவதும் 11 லட்சம் மாணவர்கள் செவ்வாய்க்கிழமையன்று நெட் தேர்வு எழுதினர். ஆனால் நெட் தேர்வில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்பதால் இத்தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும் விரைவில் தேர்வு தேதி அறிவிக்கப்படும் எனவும் மத்திய கல்வி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனைத் தொடர்ந்து இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான "நீட்" நுழைவுத் தேர்வையும் மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும் என்கின்றனர் எதிர்க்கட்சித் தலைவர்கள். நீட் நுழைவுத் தேர்வு முறைகேடுகள் ஒவ்வொரு நாளும் வெளியாகி வருகின்றன. நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் விற்பனை விவகாரத்தில் பீகார் மாநில அமைச்சருக்கு தொடர்பிருப்பதாகவும் கூறப்படுகிறது. நீட் தேர்வு விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் ஜூன் 21-ந் தேதி போராட்டத்தை அறிவித்துள்ளது. ஜூன் 24-ந் தேதி திமுக போராட்டம் நடத்துகிறது. ஏற்கனவே வட இந்திய மாநிலங்களில் நீட் நுழைவுத் தேர்வுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. உச்சநீதிமன்றமும் நீட் முறைகேடு விவகாரத்தில் கடுமை காட்டி வருகிறது.
இந்த நிலையில் நெட் தேர்வு ரத்தைப் போல நீட் நுழைவுத் தேர்வையும் ரத்து செய்ய வேண்டும் என எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தமது எக்ஸ் பக்கத்தில், நெட் தேர்வு ரத்து என்பது பல லட்சக்கணக்கான மாணவர்களுக்கான வெற்றி. மோடி அரசின் ஆணவத்துக்கு கிடைத்த தோல்வி. நெட் தேர்வை ரத்து செய்தது போல நீட் தேர்வை எப்போது ரத்து செய்வீர்கள்? என கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் நீட் தேர்வு முறைகேடுகளில் ஈடுபட்டோர் மீது கடும் நடவடிக்கை எடுப்போம் என்கிறார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான். பீகார் மாநில அமைச்சர் ஒருவருக்கு நீட் வினாத்தாள் விற்பனையில் தொடர்பிருப்பதாக கூறப்படுகிறதே? அவர் எப்போது கைது செய்யப்படுவார்? என்றும் கார்கே கேள்வி எழுப்பியுள்ளார். இதேபோல "இந்தியா" கூட்டணி தலைவர்கள் பலரும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications