லக்கிம்பூர் படுகொலை- மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை டிஸ்மிஸ் செய்க- எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி
டெல்லி: உத்தரப்பிரதேச மாநிலம் லக்கிம்பூரில் மத்திய அரசுக்கு எதிராகப் போராடிய விவசாயிகள் மீது கார் ஏற்றி படுகொலை செய்த சம்பவத்தில் தொடர்புடைய மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவை டிஸ்மிஸ் செய்ய வலியுறுத்தி நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் இன்று பேரணி நடத்தினர். மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது.
மத்திய அரசின் விவசாய சட்டங்களை எதிர்த்து லக்கிம்பூரில் போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்தின் போது விவசாயிகள் மீது காரை ஏற்றி 4 பேரை படுகொலை செய்ததாக மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ரா உட்பட 12 பேர் கைது செய்யப்பட்டனர்.

அம்பலமானது சதி
மேலும் உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் படி சிறப்பு விசாரணைக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்த விசாரணைக் குழுவானது, லக்கிம்பூர் படுகொலை சம்பவம் என்பது திட்டமிட்ட சதி என்று அம்பலப்படுத்தியது. இதனைத் தொடர்ந்து லக்கிம்பூர் விவகாரம் மீண்டும் பூதாகரமானது.

அஜய் மிஸ்ராவை டிஸ்மிஸ் செய்திடுக
லக்கிம்பூர் படுகொலையில் மத்திய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவுக்கு நேரடி தொடர்பு உள்ளது; ஆகையால் பிரதமர் மோடி அவரை உடனடியாக மத்திய அமைச்சரவையில் இருந்து டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று நாடாளுமன்றத்தின் இருசபைகளிலும் எதிர்க்கட்சி எம்.பிக்கள் வலியுறுத்தி அமளியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் லோக்சபா, ராஜ்யசபா நடவடிக்கைகள் மிக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

பார்லியில் பேரணி
மேலும் நாடாளுமன்ற வளாகத்திலும் அஜஸ் மிஸ்ராவை டிஸ்மிஸ் செய்ய கோரி போராட்டங்களை எதிர்க்கட்சி எம்.பிக்கள் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று நாடாளுமன்றத்தின் காந்தி சிலையில் இருந்து விஜய் சவுக் வரையில் பதாகைகளுடன் எதிர்க்கட்சி எம்.பிக்கள் பேரணி நடத்தினர். லக்கிம்பூர் சம்பவத்தில் அஜய் மிஸ்ராவை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்; 12 ராஜ்யசபா எம்.பிக்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப்பேரணியில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ராகுல் விளாசல்
இந்த பேரணிக்கு தலைமை வகித்த மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நாடாளுமன்றத்தில் லக்கிம்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்கிறோம். ஆனால் மத்திய அரசு இதனை ஏற்க மறுக்கிறது. லக்கிம்பூர் சம்பவத்தில் மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை டிஸ்மிஸ் செய்தாக வேண்டும். விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்க தெரிந்த பிரதமருக்கு அவர்களை படுகொலை செய்த அமைச்சரை ஏன் டிஸ்மிஸ் செய்ய முடியவில்லை? என்றார். இந்த பேரணியில் திமுக, இடதுசாரிகள் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சி எம்.பிக்கள் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications