பாஜகவினருடன் பெண் எம்பிக்கள் ரகளை.. பதறிய மத்திய அமைச்சர்கள்.. பகீர் குற்றச்சாட்டு.. லோக்சபாவில்என்ன நடந்தது?
டெல்லி: நாடாளுமன்றத்தில், ஜனாதிபதி திரெளபதி முர்மு உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் பிரதமர் மோடி பேச இருந்த நிலையில் கடும் அமளியால் அந்த உரை ரத்தானது. இந்த சமயத்தில் பிரதமர் மோடியின் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி எம்பிக்கள் ரகளை செய்ததாகவும், மத்திய அமைச்சர்கள், பாஜக எம்பிக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியானதாகவும் என்று பரபரப்பான குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆண்டின், முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜனாதிபதி உரையுடன் தொடங்கும். அதன்படி ஜனவரி 28ல் நாடாளுமன்ற கூட்டுக்குழுவில் ஜனாதிபதி திரெளபதி முர்மு உரையாற்றினார். நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் எம்பிக்கள் பேசி வருகின்றனர்.
மோடிக்கு எதிர்ப்பு
அந்த வகையில் நேற்று ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பிரதமர் மோடி லோக்சபாவில் பதிலுரை வழங்க இருந்தார்.மாலை 5 மணிக்கு நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கு முன்பாகவே எதிர்க்கட்சி எம்பிக்கம் கோஷமிட்டனர். அமெரிக்கா - இந்தியா வர்த்தகத்தில் மோடி சரணடைந்துவிட்டார் என்று கூறி கோஷமிட்டனர்.
மோடியின் இருக்கையை சூழ்ந்து..
கடும் கூச்சல் குழப்பத்தால் நாடாளுமன்ற லோக்சபா ஒத்திவைக்கப்பட்டது. பிரதமர் மோடி பதிலுரை வழங்கவில்லை. அவர் உரையாற்ற சபைக்கு வர தயாரான நிலையில் அமளியால் அவர் வரவில்லை. இந்நிலையில் தான் லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்பிக்கள் பிரதமர் மோடியின் இருக்கையை சூழ்ந்து ஆளும் கட்சி எம்பிக்களுடன் மோதல் ஏற்படும் சூழல் உருவானதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாஜக எம்பி சொன்ன மேட்டர்
இதுபற்றி பாஜக எம்பி மனோஜ் திவாரி பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.இதுபற்றி அவர் கூறுகையில், ‛‛சபை ஒத்திவைக்கப்பட்ட பின்னரும் கூட காங்கிரஸ் உள்பட பிற எதிர்க்க்டசி பெண் எம்பிக்கள் ஆளும்கட்சி எம்பிக்களின் இருக்கைகளை நோக்கி வந்தனர். பிரதமர் மோடியின் இருக்கைக்கு பின்னால் இருக்கும் 2 வரிசைகள் வரை சென்றனர். பாஜக எம்பி நிஷிகாந்த துபேவை நோக்கி அவர்கள் முன்னேறினர்.
மோடியால் நுழைய முடியவில்லை
மீண்டும் தங்கள் இருக்கைகளுக்குத் திரும்புமாறு மூத்த அமைச்சர்கள் கூறினர். ஆனால் அவர்கள் அதனை புறக்கணித்தனர். நிலைமை கட்டுப்பாட்டை இழந்து சென்றதால் பிரதமர் மோடியால் லோக்சபாவுக்குள் நுழைய முடியவில்லை.
மோடியை தாக்க முயற்சி?
பிரதமர் மோடி அமரும் இருக்கைக்கு சென்று ரகளை செய்தனர். எதிர்க்கட்சி பெண் எம்பிக்களின் ஆக்ரோஷமான உடல்மொழி பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியது. பிரதமர் மோடியை தாக்கும் எண்ணத்துடன் அவர்கள் இருந்திருக்கலாம்'' என்று பகிரங்கமாக குற்றம்சாட்டி உள்ளார்.
இந்த அமளி நடந்தபோது பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் லோக்சபாவில் இல்லை . ஆனால் இந்த குற்றச்சாட்டை எதிர்க்கட்சி தலைவர்கள் முற்றிலுமாக மறுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications