Om Birla: சபாநாயகர் ஓம்பிர்லா பதவி நீக்கம்? காங்., நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸ்.. கையெழுத்திடாத ராகுல்
டெல்லி: லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லாவை அந்த பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என்பதற்கான நம்பிக்கையில்லா தீர்மானம் நோட்டீஸை காங்கிரஸ் கட்சி இன்று வழங்கியது. ராகுல் காந்திக்கு பேச அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறி காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சி எம்பிக்கள் 118 பேர் இந்த தீர்மானத்தை கொண்டு வர கையெழுத்திட்டுள்ளனர். ஆனால் ராகுல் காந்தி இந்த நோட்டீஸில் கையெழுத்திடாத நிலையில் அதன் பின்னணி குறித்த பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.
லோக்சபா சபாநாயகராக இருப்பவர் ஓம்பிர்லா. பாஜகவை சேர்ந்தவர். இந்நிலையில் தான் ஓம்பிர்லா மீது எதிர்க்கட்சிகள் கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.
நாடாளுமன்ற லோக்சபாவில் எதிர்க்கட்சி எம்பிக்களை பேச அனுமதிப்பது இல்லை என்று தொடர்ந்து காங்கிரஸ் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகளின் எம்பிக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

ஓம்பிர்லா மீது குற்றச்சாட்டு
குறிப்பாக ஜனாதிபதி திரெளபதி முர்முவின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை பேச விடாததால் காங்கிரஸ் உள்பட ‛இந்தியா' கூட்டணி கட்சியினர் கொந்தளித்தனர். மேலும் ஓம்பிர்லா ஆளும் கட்சிக்கு சாதகமாக செயல்படுவதாகவும், நடுநிலைமை தவறுவதாகவும் கூறி வருகின்றனர்.
நம்பிக்கையில்லா தீர்மானம்
இந்நிலையில் தான், ஓம்பிர்லாவை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்க கோரும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர எதிர்க்கட்சிகள் முடிவு செய்தனர்.
அதன்படி காங்கிரஸ் கட்சியின் எம்பி கவுரவ் கோகோய் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான நோட்டீஸை லோக்சபா பொதுச்செயலாளரிடம் வழங்கினார். இந்த நோட்டீஸில் மொத்தம் 119 எம்பிக்களின் கையெழுத்து உள்ளது.
கையெழுத்து போடாத ராகுல்
இன்று மதியம் 1:14 மணிக்கு செயல்முறை விதிகள் மற்றும் வணிக நடத்தை விதிகளின் 94 சி பிரிவின் கீழ் இந்த நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில் மொத்தம் 118 எம்பிக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இருப்பினும் இந்த நோட்டீஸில் ராகுல் காந்தி கையெழுத்திடவில்லை. ராகுல் காந்தி தற்போது லோக்சபா எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்.
இந்நிலையில் தான் தான் சபையின் மாண்பு கருதி அவர் கையெழுத்திடவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறுகையில், ‛‛எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கையெழுத்திடுவது மரபுக்கு உகந்ததல்ல. இது நாடாளுமன்றத்தின் மாண்பு, மரபுகளை மதிக்கும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது'' என்றார்.
வெற்றி பெறுமா தீர்மானம்?
எதிர்க்கட்சிகளின் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற வேண்டும் என்றால் லோக்சபாவில் பெரும்பான்மையான எம்பிக்களின் ஆதரவு வேண்டும். ஆனால் தற்போது காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகளுக்கு பெரும்பான்மை இல்லை. அதிலும் இந்த தீர்மானத்துக்கு மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆதரவு இல்லை என்று கூறப்படுகிறது. அதேவேளையில் ஆளும் பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணிக்கு தான் பெரும்பான்மை உள்ளது.
இதனால் இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டாலும் அது தோல்வியில் தான் முடியும். இருப்பினும் ஓம்பிர்லா ஒரு தலைபட்சமாக செயல்படுவதை சுட்டிக்காட்டும் வகையில் எதிர்க்கட்சிகள் இந்த நம்பிக்கை தீர்மான நோட்டீசை வழங்கி உள்ளன. இருப்பினும் கூட இந்த தீர்மானம் வெற்றி பெறுவது கடினம் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications