''உங்கள் கொள்கையை விட.. இந்திய சட்டம் உயர்ந்தது''.. டுவிட்டர் மீது நாடாளுமன்ற நிலைக்குழு பாய்ச்சல்!
டெல்லி: ''உங்கள் கொள்கையை விட எங்கள் நாட்டின் சட்டம் மிக உயர்ந்தது'' என்று டுவிட்டர் நிறுவனத்திடம் நாடாளுமன்ற நிலைக்குழு தெரிவித்தது.
பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கும், ஓடிடி தளங்களுக்கும் கடந்த பிப்ரவரி மாதம் புதிய விதிமுறைகளை மத்திய அரசு கொண்டு வந்தது.
வாட்ஸ்-அப் மறுப்பு
புதிய விதிமுறைகளை செயல்படுத்த இந்த நிறுவனங்களுக்கு மத்திய அரசு 3 மாத காலம் அவகாசம் வழங்கியது. இந்த காலஅவகாசம் முடிந்துள்ள நிலையில் பேஸ்புக், கூகுள் நிறுவனங்கள் மத்திய அரசின் விதிமுறைகளுக்கு கட்டுப்படுவதாக அறிவித்தன. முதலில் சிறிது முரண்டு பிடித்த வாட்ஸ்அப் நிறுவனமும் பின்னர் மத்திய அரசின் புதிய விதிகளை ஏற்றுக் கொள்வதாக கூறியது.
அடிபணிய மறுக்கும் டுவிட்டர்
ஆனால் டுவிட்டர் நிறுவன ம் இதற்கு தொடக்கம் முதலே கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்தியாவில் கருத்துரிமைக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை நிலவுவதாகவும், இந்தியாவில் பணியாற்றும் டுவிட்டர் ஊழியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை அடைவதாகவும் டுவிட்டர் நிறுவனம் வெளிப்படையாக கூறியது.
கடும் மோதல்
ஏற்கனவே டூல்கிட் விவகாரம், ப்ளூ டிக் விவகாரம் தொடர்பாக டுவிட்டரும், மத்திய அரசும் குடுமிப்பிடி சண்டை போட்டு வரும் நிலையில் இந்த புதிய விதிகள் தொடர்பாக டுவிட்டருக்கும், மத்திய அரசுக்கும் இடையிலான மோதல் முற்றியது. டுவிட்டரின் பிடிவாதத்தால் அதனை சட்ட பாதுகாப்பில் இருந்து விலக்கியது மத்திய அரசு.
அபராதம் விதிக்க முடிவு
தங்களது கொள்கையில் உறுதியாக இருப்பதாக டுவிட்டர் தொடர்ந்து தெரிவித்து வருகிறது. காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் தலைமையில் நடந்த நாடளுமன்ற நிலைலக்குழுவிடம் டுவிட்டர் உயர் அதிகாரிகள் தங்கள் தரப்பு விளக்கத்தை தெரிவித்தனர். '' உங்கள் கொள்கையை விட எங்கள் நாட்டின் சட்டம் மிக உயர்ந்தது. எங்கள் சட்டமே செல்லும்'' என்று டுவிட்டர் நிறுவனத்திடம் நாடளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் கோபமாக தெரிவித்தனர். இந்திய அரசின் சட்டத்தை மதிக்காத டுவிட்டர் நிறுவனம் மீது அபராதம் விதிக்கவும் முடிவு செய்யப்ட்டதாக கூறப்படுகிறது.