ப.சிதம்பரம் வீடு எதிரே குவிந்த தொண்டர்கள்.. சிபிஐ அதிகாரிகளுடன் தள்ளுமுள்ளு.. தடியடியால் பரபரப்பு
Recommended Video
டெல்லி: முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் இல்லத்திற்கு வெளியே, காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் சிபிஐ அதிகாரிகள் நடுவே பெரும் தள்ளுமுள்ளு, கைகலப்பு ஏற்பட்டது. போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை விரட்டியடித்தனர்.
ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கில் சிதம்பரத்திடம் விசாரணை நடத்துவதற்காக சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் முயற்சி செய்து வருகின்றனர்.
இதுவரை ப.சிதம்பரம் எங்கே இருக்கிறார் என்று தெரியாத நிலையில், டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கு இன்று இரவு சென்றார் சிதம்பரம். இதையடுத்து அவரது வீட்டுக்கு பின்தொடர்ந்து சென்ற சிபிஐ அதிகாரிகள் உள்ளே நுழைய அனுமதி கேட்டனர். ஆனால் வாசலில் நின்ற பாதுகாவலர்கள் அவர்களை உள்ளே விடவில்லை. இதையடுத்து சில சிபிஐ அதிகாரிகள் சிதம்பரம் வீட்டு சுவர் ஏறி குதித்து உள்ளே சென்றனர்.
இதனிடையே வாசலில் நின்ற காங்கிரஸ் தொண்டர்கள், சிபிஐ அதிகாரிகள் உடன் மோதலில் ஈடுபட்டனர். இதையடுத்து டெல்லி காவல்துறையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. அவர்கள் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்ட சிதம்பரம் ஆதரவாளர்களையும் காங்கிரஸ் தொண்டர்களையும் லேசான தடியடி நடத்தி விரட்டி அடித்தனர்.
இதனால் சிதம்பரம் இல்லம் பகுதி போர்க்களம் போல காட்சியளித்தது.