கிடைக்காது என்ற அவநம்பிக்கை! 45 கோடி மக்கள் வேலை தேடுவதை நிறுத்தி விட்டார்கள்! ராகுல் காந்தி வேதனை
டெல்லி: ‛‛ஒவ்வொரு வீட்டிலும் வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. புதிய இந்தியாவின் புதிய முழக்கமாக வேலையில்லா திண்டாட்டம் மாறியுள்ளது. 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியின் ‛மாஸ்டர் ஸ்ட்ரோக்' காரணமாக 45 கோடிக்கும் அதிகமான மக்கள் வேலை கிடைக்கும் எனும் நம்பிக்கையை இழந்துள்ளனர்'' என பிரதமர் நரேந்திர மோடியை, காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தேசிய தலைவர் ராகுல்காந்தி. இவர் கேரள வயநாடு மக்களவை தொகுதி எம்பியாக உள்ளார். நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் தீவிர பிரசாரம் மேற்கொண்டாலும் அது காங்கிரஸ் கட்சிக்கு பலனிக்கவில்லை.
இதனால் காங்கிரஸ் கட்சி தனது பிரசார வியூகத்தை மாற்றியுள்ளது. பாஜகவின் ஒவ்வொரு அசைவையும் தற்போது கண்காணித்து விமர்சனம் செய்து வருகிறது.

ராகுல்காந்தி விமர்சனம்
குறிப்பாக ராகுல்காந்தி தீவிரமாக செயல்பட்டு வருகிறார். பாஜக ஆட்சியில் இந்தியாவில் நசுங்கிய தொழில்கள், பணவீக்கம், மதநல்லிணக்கத்தில் ஏற்பட்டுள்ள குறைபாடு, வேலையிழப்பு, வேலையில்லா திண்டாட்டம் ஒவ்வொன்றையும் ராகுல்காந்தி விமர்சித்து வருகின்றார். இந்நிலையில் இன்று காலை அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தியாவில் உள்ள வேலையிழப்பு பற்றி குறிப்பிட்டுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

45 கோடி பேர் நம்பிக்கை இழப்பு
‛'புதிய இந்தியாவின் புதிய முழக்கமாக ஒவ்வொரு வீட்டிலும் வேலையில்லா திண்டாட்டம் உள்ளது. 75 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியின் 'மாஸ்டர் ஸ்ட்ரோக்' காரணமாக 45 கோடிக்கும் அதிகமான மக்கள் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்துள்ளனர்'' என குறிப்பிட்டுள்ளார்.

2.1 கோடி வேலையிழப்பு
மேலும் இந்த டுவிட்டர் பதிவில் அவர் இந்தி செய்திதாளின் படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார். அதில், ‛‛கடந்த ஐந்தாண்டுகளில் 2.1 கோடி வேலையிழப்பு ஏற்பட்டுள்ளது. 45 கோடி பேர் வேலை தேடுவதை நிறுத்திவிட்டனர்'' என வெளியான செய்தியை மேற்கோள் காட்டியுள்ளார். ராகுல்காந்தியின் இந்த டுவிட்டர் பதிவுக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவாகவும், எதிராகவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர் விமர்சனம்
முன்னதாக, சிபிஎஸ்சி சார்பில் 10 மற்றும் 12ம் வகுப்புகளின் பாடத்திட்ட மாற்றம் தொடர்பாக, ‛‛மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) என்பது உண்மையில் 'மத்திய கல்வியை ஒடுக்கும் கல்வி வாரியம்'' என ராகுல்காந்தி விமர்சனம் செய்து இருந்தார். மேலும் டெல்லியில் கலவரம் நடந்த ஜஹாங்கிர்புரியில் ஆக்கிரமிப்பு அகற்றியதை அரசியலமைப்பின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என ராகுல்காந்தி சாடினார். அதற்கு முன்பு ஏப்ரல் 9ல் டெல்லியில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் ராகுல்காந்தி, "அரசியலமைப்பு சட்டத்தை காப்பாற்ற, ஆர்எஸ்எஸ்ன் கைகளில் இருக்கும் துறைகளை பாதுகாக்க வேண்டும்" என கூறியிருந்தார். இவ்வாறு தொடர்ச்சியாக ராகுல்காந்தி பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை விமர்சனம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications