“இடஒதுக்கீட்டை ஒழிப்பதற்காக.. அரசியலமைப்பை திருத்த பாஜக தயங்காது!” ப.சிதம்பரம் சாடல்
டெல்லி: இடஒதுக்கீட்டை ஒழிக்க வேண்டும் என பாஜக முயன்று வருவதாகவும், இதற்காக அரசியலமைப்பு சட்டத்தையும் திருத்த பாஜக தயங்காது என்றும் முன்னாள் மத்திய நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு எதிராக காங்கிரஸ் கையில் எடுத்த முக்கிய பிரசாரம், இடஒதுக்கீடு என்பதுதான். இரண்டு முறை ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியிருந்த பாஜக, மூன்றாவது முறையும் அதிகாரத்தை கைப்பற்றினால் காங்கிரஸை காணாமல் போக செய்துவிடும் என்று சொல்லப்பட்டது. எனவே, பாஜகவுக்கு எதிராகவும், நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் பலத்தை நிரூபிக்கவும் காங்கிரஸ் பல்வேறு வியூகங்களை வகுத்து போராடியது.

பாஜகவுக்கு எதிரான கருத்தியல் ரீதியிலான போராட்டத்தில், காங்கிரசுக்கு இடஒதுக்கீடு குறித்த விமர்சனங்கள் பலனை கொடுத்தது. அதாவது பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு மீண்டும் வந்தால், இடஒதுக்கீடு முறை என்பதே முழுமையாக ஒழிக்கப்படும் என்று விமர்சித்திருந்தது. ராகுல் காந்தி தேர்தல் பிரசார மேடைகளிலும், செய்தியாளர்கள் சந்திப்பின்போதும் சிறிய சைஸ் அரசியலமைப்பு சட்ட புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு மேற்குறிப்பிட்ட விமர்சனத்தை அடுக்கியிருந்தார்.
இடஒதுக்கீட்டுக்கு ஆதாரமாக விளங்கும் அரசியலமைப்பை பாஜகவிடமிருந்த பாதுகாப்போம் என்று காங்கிரஸ் தலைவர்கள் முழங்கினார்கள். கடந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு பெரும்பான்மையான இடம் கிடைக்காததற்கு, காங்கிரஸின் இந்த யுக்திதான் முக்கிய காரணமாக இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. இப்படி இருக்கையில், பாஜக இடஒதுக்கீட்டை அழித்துவிடும் என்று காங்கிரஸ் மீண்டும், மீண்டும் பிரசாரம் பொய் பிரசாரம் செய்வதாக பாஜக தலைவர்கள் குற்றம்சாட்டுகிறார்களே? என்று ப.சிதம்பரத்திடம் கேள்வி எழுப்பப்பட்டது.
தனியார் செய்தி ஊடகம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் சிதம்பரம் பங்கேற்றிருந்தபோது இந்த கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதற்கு பதிலளித்த அவர், "எங்களுடைய குற்றச்சாட்டு உண்மைதான்" என்று பதிலளித்துள்ளார்.
அதாவது, "பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு (EWS) 10 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கியதே, இடஒதுக்கீட்டை நீர்த்துப்போக செய்யும் செயல்தான். 10% இடஒதுக்கீட்டிற்காக அரசியலமைப்பு சட்டத்தில் 103 வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த திருத்தம் தொடர்பான உச்சநீதிமன்ற வழக்கில், 5 நீதிபதிகளில் 3 பேர் ஆதரவாகவும், 2 பேர் எதிராகவும் தீர்ப்பு வழங்கியிருந்தனர். இந்த 3:2 என்கிற விகிதம் விரைவில் மாறலாம்.
நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றாலும் கூட பாஜக அரசியலமைப்பை திருத்தும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதன் மூலம் இடஒதுக்கீட்டை நீக்கவோ, அதை நீர்த்து போக செய்யவோ பாஜக தயங்காது.
இந்தியாவில் தேர்தல்கள் குறைந்தபட்ச நியாயத்துடனும், நேர்மையுடனுமாவது நடத்தப்பட வேண்டும். ஆனால் இங்கு நடந்தது என்ன? காங்கிரஸின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. எதிர்க்கட்சி தலைவர்கள் மீது ஏராளமான வழக்குகள் பதியப்பட்டன. வேறு எந்த நாட்டிலாவது தேர்தல் நேரத்தில் எதிர்க்கட்சியின் வங்கி கணக்குகளை முடக்கி பார்த்திருக்கிறீர்களா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications