என்ன நிபந்தனை வேண்டுமானாலும் போடுங்க.. ஜாமீன் கொடுங்க.. ப.சிதம்பரம் சார்பில் கபில் சிபல் வாதம்
Recommended Video
டெல்லி: எந்த ஒரு நிபந்தனையையும் ஏற்க ப.சிதம்பரம் தயாராக இருக்கிறார், அவருக்கு ஜாமீன் கொடுங்கள் என்று உச்சநீதிமன்றத்தில், கபில் சிபல் வாதிட்டார்.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த வாரம் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் கைது செய்யப்பட்டார். இதையடுத்து ப. சிதம்பரத்தை 5து நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அவரின் காவல் இன்றோடு முடிகிறது.
இதையடுத்து அவரது கஸ்டடியை நீட்டிக்க வேண்டும் என்று சிபிஐ கோரிக்கை வைத்தது. சிபிஐ நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக ப. சிதம்பரம் சார்பாக ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையில், ப. சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர், கபில் சிபல் உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் வாதத்தை முன் வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:
ப. சிதம்பரத்தை தவிர இந்த வழக்கில் எல்லோரும் ஜாமீனில் இருக்கிறார்கள். சிலருக்கு அவர்கள் கேட்காமலே ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ப. சிதம்பரத்திற்கு தெரியாமல் பல ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். எந்த வழக்கிலும் இதற்கு முன் இப்படி நடந்தது கிடையாது.
ப. சிதம்பரத்தை அவமானப்படுத்த வேண்டும் என்று கைது செய்துள்ளனர். அவரின் கைது நடவடிக்கை நிகழ்ந்ததே அதை மனதில் வைத்துதான். ப. சிதம்பரம் எப்போதுமே விசாரணைக்கு சரியாக ஆஜராகி உள்ளார்.
ஆனால், சிபிஐ அதையும் மீறி அவரை கைது செய்துள்ளது. ஒருமுறை உங்களை கைது செய்துவிட்டால் உலகம் உங்களை தவறாக பார்க்கும். உங்களை எல்லோரும் குற்றவாளி போல பார்ப்பார்கள். இதுதான் சிபிஐ நோக்கம்.
சிதம்பரம் எந்தவொரு நிபந்தனையையும் ஏற்க தயாராக இருக்கிறார். எனவே, நீதிமன்றம் சில நாட்கள் அவகாசம் அளித்து, அவர் இந்த நிபந்தனைகளுக்கு ஒத்துழைத்தாரா இல்லையா என்பதைப் பார்க்கலாமே. ஜாமீன் நிபந்தனைகளை, சிதம்பரம் மீறியதாக நீதிமன்றம் நினைத்தால், அவரை காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் உத்தரவிடலாம். அதற்கான வாய்ப்பு திறந்தே உள்ளது. இவ்வாறு கபில் சிபல் வாதிட்டார்.
இதனிடையே, சிபலை சுருக்கமாக வாதத்தை, முடிக்கச் சொன்னார், நீதிபதி. ஆனால், கூடுதலாக வாதம் முன்வைக்க மேலும் ஒரு மணிநேரம் அவகாசம் தேவை என்று கபில் சிபல் கேட்டுக்கொண்டார்.