அக்னிபாத் திட்டம்- மத்திய அரசு நெருப்புடன் விளையாடுகிறது.. நிறுத்தி வையுங்க...ப.சிதம்பரம் எச்சரிக்கை
டெல்லி: அக்னிபாத் எனும் ராணுவத்துக்கு ஆள்சேர்க்கும் புதிய திட்டத்தை அமல்படுத்தி இருப்பதன் மூலம் மத்திய பாஜக அரசு நெருப்புடன் விளையாடுகிறது என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
ராணுவப் பணியை 4 ஆண்டுகளாக குறைக்கும் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது. இத்திட்டத்துக்கு வட இந்திய மாநிலங்களில் மிகப் பெரும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
பீகார் மாநிலத்தில் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக ரயில்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன. ஹரியானாவில் கல்வீச்சு துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. பீகாரில் பாஜக அலுவலகமும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் அக்னிபாத் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு நிறுத்த வேண்டும் என்று மூத்த காங்கிரஸ் தலைவர் ப.சிதம்பரம் வலியுறுத்தி உள்ளார். டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் ப.சிதம்பரம் கூறியதாவது:
அக்னிபாத் திட்டமானது பல்வேறு சர்ச்சைகளைக் கொண்டது; பல்வேறு ஆபத்துகளைக் கொண்டது. அக்னிபாத் திட்டத்தின் கீழ் ராணுவத்துக்கான ஆட்சேர்ப்பு வயது 17 முதல் 21 வரை என்பது பல கேள்விகளை எழுப்புகிறது. நாட்டின் பெரும்பகுதியான இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை இது மறுப்பதாக இருக்கிறது.
எல்லையில் நிற்கும் நமது ராணுவத்தினருக்கு எதிர்காலம் குறித்த திருப்திகரமான நம்பிக்கையை நாம் உருவாக்க வேண்டும். அக்னிபாத் போன்ற திட்டங்களை சோதனை முயற்சியாக செயல்படுத்தி பார்த்துவிட்டுதான் நடைமுறைப்பாடுத்தி இருக்கவேண்டும். இத்திட்டம் தொடர்பாக ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரிகளின் கருத்துகளை கேட்க வேண்டும். அக்னிபாத் ராணுவ ஆட்சேர்ப்புத் திட்டத்துக்கு ஒட்டுமொத்தமாகவே எதிர்ப்பு உள்ளது.
ஆகையால் மத்திய அரசானது அக்னிபாத் திட்டத்தை நிறுத்தி வைக்க வேண்டும். அக்னிபாத் திட்டத்தை மத்திய அரசு அவசரகதியில் கொண்டு வந்துள்ளது. அக்னிபாத் திட்டத்தின் மூலமான ராணுவ பயிற்சி என்பது முறையான ராணுவ பயிற்சியை, ராணுவத்தின் பாரம்பரியமான விழுமியங்களை கேள்விக்குள்ளாக்குகிறது. இவ்வாறு ப.சிதம்பரம் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications